நாட்டையே உலுக்கிய நிர்பயா மேல்முறையீட்டு வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
டெல்லி: நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார சம்பவத்தில், மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஜோதிசிங் (நிர்பயா) என்ற மருத்துவ மாணவி மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பலாத்காரம் செய்த அந்தக் கும்பல் ஜோதி சிங்கை கொடூரமாக தாக்கவும் செய்தது. இதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோதிசிங் சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார்.
நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவனான ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இளங்குற்றவாளி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இளம் குற்றவாளியின் சிறைத் தண்டனை சட்டப்படி முடிந்து விட்டதால் அவரது விடுதலையை தடுக்க முடியாது என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது..
மீதமுள்ள 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை டெல்லி உயர்நீதிமன்றமும் கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இதில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.