ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட்டில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது 2-ம் கட்ட தேர்தல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 18 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 20 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவையின் 2ம் கட்ட தேர்தல் நடந்தது.
இந்தத் தொகுதிகளில் பல்வேறு கட்சித் தலைவர்கள் நடத்திய அனல்பறக்கும் பிரச்சாரம் நேற்றுமுன்தினம் முடிவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தில் தீவிரமாக செயல்பட்ட சஜத் லோனே மற்றும் 4 மாநில அமைச்சர்கள் 2 கட்டத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவர்கள் ஆவர்.
ஜம்முவில் 9 தொகுதிகளும் காஷ்மீரில் 9 தொகுதிகளும் இன்று தேர்தலை எதிர்கொள்கின்றன. மொத்தம் 175 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13.35 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 16 தொகுதிகள் பழங்குடியினருக்கான ரிசர்வ் தொகுதிகளாகும். 35 பெண்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் முன்னாள் முதல்வர்கள் அர்ஜுன் முண்டா, மதுகோடா மற்றும் 3 அமைச்சர்கள் முக்கியமானவர்கள்.
இதனிடையே வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதியம் 2 மணிவரையிலான நிலவரப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட்டில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. எனவே இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்போது இது சுமார் 65 சதவீதத்தை எட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள ஜார்கண்டிலும் தேர்தல் அமைதியாக நடந்துள்ளதும், மக்கள் நல்ல ஆதரவை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது