காங்கிரசுடன் மட்டுமல்ல முஸ்லீம் லீக்குடனும் கூட்டணி.. சிவசேனாவின் அசரடிக்கும் அரசியல் வரலாறு
Recommended Video
மும்பை: குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பதில் இருந்து, என்.சி.பி தலைவர் ஷரத் பவாரின் மகள் சுப்ரியா சூலேவுக்கு எதிராக வேட்பாளரை களமிறக்காதது, கருத்தியல் ரீதியாக மாறுபடும் முஸ்லீம் லீக்குடன் இணைந்து செயல்படுவது வரை, சிவசேனாவுக்கு பல்வேறு ஆச்சரியப்பட வைக்கும் அரசியல் வரலாறு உண்டு.
சிவசேனாவின் கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு, இந்துத்துவ நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற சிவசேனா, ஏன் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறி, காங்கிரஸ் மற்றும் என்சிபியின் ஆதரவை நாடியது என்பதில் பெரிய ஆச்சரியம் இருக்காது.
1966 ஆம் ஆண்டில் பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட, சிவசேனா அதன் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட பயணத்தில், காங்கிரஸுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி வைத்துள்ளது என்பதே வரலாறு.
முதல்வர் பதவிகள்... பாஜகவின் புதிய வியூகங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் 'மண்ணின் மைந்தர்கள்'
தொழிலாளர் யூனியன்களுக்கு எதிராக சிவசேனா
பிரபல அரசியல் ஆய்வாளர் சுஹாஸ் பால்ஷிகர் தனது பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில், வெளியிட்ட கட்டுரையில் மூத்த மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ராம்ராவ் ஆதிக் முதலாவது, சிவசேனா பேரணியில் கலந்து கொண்டார் என்று குறிப்பிடுகிறார். 'The Cousins Thackeray-Uddhav and Raj and in the shadow of their Sena' என்ற நூலை எழுதிய தவால் குல்கர்னி, 1960கள் மற்றும் 70களில், சிவசேனா கட்சி பெரும்பாலும், இடதுசாரிகளின் செல்வாக்கையும், தொழிலாளர் யூனியன்களையும் ஒடுக்க காங்கிரஸால் பயன்படுத்தப்பட்டது என்று கூறுகிறார்.
வசந்த் சேனா
1971 ல் கட்சி காங்கிரஸ் (ஓ) உடன் கூட்டணி வைத்து மும்பை மற்றும் கொங்கன் பிராந்தியத்தில் லோக்சபாவுக்கு மூன்று வேட்பாளர்களை நிறுத்தி சிவசேனா தோல்வியுற்றது. அத்தோடு, 1977ல் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலைக்கும், சிவசேனா ஆதரவளித்தது. அந்த ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. "1977 ஆம் ஆண்டில், மேயர் தேர்தலில் காங்கிரஸின் முரளி தியோராவையும் அது ஆதரித்தது" என்று குல்கர்னி கூறுகிறார். 1963 முதல் 1974 வரை மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்த காங்கிரசின் வசந்த்ராவ் நாயக்கின் ராணுவம் சிவசேனா என்றும், எனவே இது சிவசேனாவே அல்ல 'வசந்த்சேனா' என்றும் அக்காலகட்டங்களில் எதிர்க்கட்சிகளால், கேலி செய்யப்பட்டது.
முஸ்லீம் லீக்குடன் கூட்டணி
1978 ஆம் ஆண்டில், ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தபோது, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் (ஐ) உடன் சிவசேனா கூட்டணி வைத்தது. அந்த சட்டமன்றத் தேர்தலில் 33 வேட்பாளர்களை சிவசேனா நிறுத்தியது. இந்திரா எதிர்ப்பு அலையால் 33 பேரும் தோற்றனர்.
மற்றொரு சுவாரசிய விஷயம் என்னவென்றால், மாநிலவாதம், இந்துத்துவா பேசக்கூடிய சிவசேனா, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்தது.
மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் அகோல்கர், 'ஜெய் மகாராஷ்டிரா' என்ற தலைப்பில் சிவசேனா குறித்த தனது புத்தகத்தில், "மும்பை மேயர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இந்த கூட்டணி அமைந்தது" என்கிறார். தென் மும்பையின் நாக்பாடாவில் உள்ள மஸ்தான் தலாவோவில் முஸ்லீம் லீக் தலைவர் ஜி எம் பனத்வாலாவுடன் சிவசேனா தலைவர், ஒரே மேடையில் தோன்றி அப்போது பிரச்சாரம் செய்தார். மும்பையில் உள்ள தொழிற்சங்கங்களில் இடதுசாரிகள் ஆதிக்கம் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸால் சிவசேனா பயன்படுத்தப்பட்டபோதிலும், 1968 இல் மது தண்டாவதியின், பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது சிவசேனா.
இந்திரா காந்தி மறைவு
இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு 80களில் காங்கிரசுக்கும், சிவ சேனாவுக்கும் இடையிலான உறவு கசக்க ஆரம்பித்தது. இருவருக்கும் இடையிலான உறவுகள் ஒரே மாதிரியாக இல்லை. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் பின்னர் ராகுல் காந்தி ஆகியோரின் காலங்களில் உறவுகள் மேலும், மோசமடைந்தன. "அது காங்கிரஸின் செல்வாக்கால் சிவசேனா வளர்ந்து கொண்டிருந்த காலமாகும், எனவே, இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு அது ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தது" என்று 'தி சேனா ஸ்டோரி' மற்றும் 'பால் தாக்கரே- சிவசேனாவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி' ஆகியவற்றின் ஆசிரியர் பத்திரிகையாளர் வைபவ் புரந்தரே கூறுகிறார்.
பாஜகவுடன் நட்பு
80 களின் பிற்பகுதியிலும் 90 களின் பிற்பகுதியிலும் கடுமையான இந்துத்துவாவை நோக்கி நகர்ந்ததால், சிவசேனா கட்சியின் தன்மையை மாற்றியது. பாஜகவுடன் நெருக்கம் ஆரம்பித்தது இந்த காலகட்டத்தில் இருந்துதான். அப்படியிருந்தும், சிவசேனா, பாஜக கூட்டணி முடிவை ஏற்காமல், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களான பிரதீபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு வாக்களித்தது. தாக்கரே மற்றும் பவார் இடையேயான அரசில் போட்டி ஐந்து தசாப்தங்களுக்கும் மேலானது. இருவரும் முரண்பட்ட சித்தாந்தங்களால் பிரிக்கப்பட்ட கடுமையான அரசியல் போட்டியாளர்கள். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
சரத் பவார்-பால் தாக்ரே நட்பு
சரத் பவார் தனது சுயசரிதையான 'On My Terms' புத்தகத்தில் "கடுமையான போட்டியாளர்களாக இருந்தபோதிலும், நானும், எனது மனைவி பிரதிபாவும் பல இரவு உணவுகளை பால்தாக்ரேவுடன் இணைந்து உண்டுள்ளோம்" என்று எழுதியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் சரத் பவார், புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, பால் தாக்கரே அவருக்கு உணவு டயட் தொடர்பான "பல அன்பு கட்டளைகளின்" பட்டியலைக் கொடுத்தார் என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
தனிப்பட்ட முறையில், பால்தாக்கரே சரத்பவாரை 'சரத்பாபு' என்றுதான் அழைப்பாராம். 2006 ஆம் ஆண்டில், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து பால்தாக்கரே வேட்பாளரை களமிறக்கவில்லை.
வாரிசுகளுக்கு சலுகை
"சரத்பாபு, சுப்ரியா, எனது முழங்கால் உயரத்திற்கு இருந்தபோதிலிருந்து நான் அவரை பார்த்து வருகிறேன். இது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய படியாகும். சுப்ரியா, ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வாகுவதை எனது கட்சி உறுதி செய்யும்" என்று பால்தாக்ரே, தன்னிடம் தொலைபேசியில் கூறியதை சரத்பவார் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். சமீபத்தில், நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பால் தாக்கரேயின் பேரனும், உத்தவ் தாக்ரே மகனுமான, ஆதித்ய தாக்ரேவுக்கு எதிராக என்.சி.பி ஒரு சாதாரண வேட்பாளரையே களமிறக்கியது. தாக்ரே குடும்பத்திலிருந்து முதல் முறையாக தேர்தல் அரசியலுக்குள் ஒருவர் வருவதை சரத் பவார் மறைமுகமாக ஆதரித்ததே இதற்கு காரணம். இந்த தேர்தலில் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்ய தாக்ரே வெற்றி பெற்றார்.