செகந்திராபாத்தில் சதர்லேண்ட் நிறுவன சாப்ட்வேர் என்ஜினியர் குத்திக் கொலை
ஹைதராபாத்: செகந்திராபாத்தில் சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிய வாலிபர் 4 பேரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பார்சிகுட்டாவில் வசித்து வந்தவர் சஞ்சய் ஜுங்கே(25). சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார். புதன்கிழமை நைட் ஷிப்ட் பணியை முடித்துவிட்டு காலை 4.30 மணி அளவில் அவர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஸ்வப்னலோக் காம்பிளக்ஸ் அருகே அவர் நடந்து செல்கையில் ஒரு மாருதி ஸ்விப்ட் கார் வந்து நின்றுள்ளது. காரில் இருந்து இறங்கிய 4 பேர் சஞ்சயை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சஞ்சய் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சஞ்சயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுக்கு இடையேயான மோதலில் இந்த கொலை நடந்திருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.