சுஷ்மாவை குறி வைத்து சோனியா, ராகுல் கடுமையாக தாக்குவதன் பின்னணியில் '16 ஆண்டுகால வன்மம்'?
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவை, சிறந்த நாடககக் கலைஞர்; கிரிமினல் என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் அவரது மகன் ராகுலும் போட்டுத் தாக்குதவன் பின்னால் 16 ஆண்டுகால வன்மம் ஒன்று புதைந்துகிடக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..
1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்... காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்ற ஓராண்டு காலத்துக்குப் பின்னர் உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி லோக்சபா தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியானது.. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியுமே குதூகலத்தில் இருந்தது.
பெல்லாரி தொகுதியைப் பொறுத்தவரையில் நாடு விடுதலை அடைந்த பின்னர் 1952ஆம் ஆண்டு நடந்த முதலாவது பொதுத்தேர்தல் தொடங்கி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே வெல்லக் கூடிய அளவுக்கு செல்வாக்கு கொண்ட தொகுதி. அதனால் பெல்லாரி தொகுதியை சோனியா தேர்ந்தெடுத்திருந்தார்...
பெல்லாரியில் சுஷ்மா- சோனியா மோதல்
ஆனால் காங்கிரசாரின் இந்த மகிழ்ச்சி 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை.. சோனியாவை எதிர்த்து பாரதிய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது....இது சோனியாவை மிகக் கடுமையான கோபத்துக்குள்ளாக்கியிருந்தது.
வெளிநாட்டு பெண்மணி
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பெல்லாரியில் டேரா போட்ட சுஷ்மா, சோனியாவுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்தார். அதுவும் 30 நாட்களிலேயே அரைகுறையாக கன்னடத்தையும் கற்றுக் கொண்டு சூறாவளியாக சோனியாவுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தார்.. அதில் பிரதானமாக இருந்தது, சோனியா வெளிநாட்டுப் பெண்மணி என்ற குற்றச்சாட்டுதான்..
லைம் லைட்டுக்கு வந்த சுஷ்மா
இத்தேர்தலில் 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுஷ்மா ஸ்வராஜை வீழ்த்தினார் சோனியா காந்தி. சோனியாவுக்கு டப் ஃபைட் கொடுத்த காரணத்தாலேயே அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சுஷ்ம்னாவுக்கு கேபினட் அமைச்சர் பதவியும் கொடுத்தார். சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவரானார்... பெல்லாரியில் சோனியாவை எதிர்த்து களமிறங்கிய பின்னர்தான் பா.ஜ.க.வில் சுஷ்மாவுக்கு செல்வாக்கும் கிடைத்தது..அதன் பின்னர்தான் 'மூத்த தலைவர்' என்ற நிலைக்கும் உயர்ந்தார்...
மொட்டையடித்து விதவை வாழ்க்கை
பெல்லாரியில் தொடங்கிய சோனியா-சுஷ்மா மோதல் 2004-ல் உச்சகட்டத்தை எட்டியது.,. 2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது சோனியா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிலை இருந்தது. ஆனால் பா.ஜ.க.வின் சுஷ்மாவும் உமாபாரதியும் மிகக் கடுமையாக இதனை எதிர்த்தார்கள்.. அதுவும் சுஷ்மாவோ, வெளிநாட்டுக்கார சோனியாவை பிரதமரக்கினால் மொட்டை அடித்துக் கொண்டு பழங்கால விதவையைப் போல ஒரு வாழ்க்கையை வாழ்வேன் என்றெல்லாம் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு இறங்கிப் போனது சோனியாவை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது..
சிக்கியது லலித் மோடி
இருப்பினும் 2009 ஆம் ஆண்டு சுஷ்மா ஸ்வராஜ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இந்த கோபமெல்லாம் சற்றே தணிந்தவராக சோனியா, சுஷ்மாவுடன் நட்பு பாராட்டத் தொடங்கினார்.. தற்போது சோனியாவுக்கும் அவரது மகன் ராகுலுக்கு சோனியாவை வறுத்தெடுக்க ஒரு நல்ல வாய்ப்பாக லலித் மோடி விவகாரம் கிடைத்துவிட்டது....
போட்டுத் தாக்குதம் தாய்-மகன்
இத்தனை ஆண்டுகாலமாக தங்களை நோக்கி வைத்த விமர்சனத்துக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்கும் வகையில் எவ்வளவு கடுமையாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு சோனியாவும் ராகுலும் கோதாவில் குதித்துவிட்டனர்.. இதன் வெளிப்பாடுதான் சுஷ்மா நாடகக் கலையில் கைதேர்ந்தவர் என்று சோனியா சொல்வது, சுஷ்மா ஒரு கிரிமினல்; திருடன் என ராகுல் சாடுவதுமாக சிலம்பமாடிக் கொண்டிருக்கிறார்கள்... சோனியா, ராகுலின் குரலில் 16 ஆண்டு கால வன்மம் வெளிப்படுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..