ஒரு வழியாக.. ஒரு வார தாமதத்திற்குப் பின்... தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை!
திருவனந்தபுரம்: கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு விஞ்ஞானி பிபி யாதவ் புனேவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டது. வியாழக்கிழமை அது தொடங்கியுள்ளது. படிப்படியாக அது தமிழகத்திலும், பரவும் என்றார்.
அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 7 செமீ அளவிலான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எதிர்பார்க்கிறது.
இதற்கிடையே, கேரள கடற்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கன மழை பெய்யும் என்றும் திருவனந்தபுரத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் சந்தோஷ் தெரிவித்தார்.
தென் மேற்குப் பருவ மழை ஜூன் 1ம் தேதி வழக்கமாக தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வார கால தாமதத்திற்குப் பின்னர் அது வந்து சேர்ந்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை இன்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட கடந்த சில நாட்களாகவே கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் பருவ மழைக்கான காரணிகள் உருவாகாத காரணத்தால் அதை முறைப்படி அறிவிக்காமல் இருந்தது வானிலை மையம்.
தமிழகத்திலும்
கேரளாவில் மழை தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குற்றாலத்தில் சாரல் மழை காணப்படுகிறது. அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் லேசான மழைப்பொழிவு காணப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 9 செமீ மழையும் குழித்துறையில் 8 செமீ மழையும் பெய்துள்ளது. தாம்பரத்தில் 3 செமீ மழை பெய்துள்ளது.
தெற்கு அரபிக் கடலில் மேற்குத் திசை காற்று வலுப்பெற்று நடுப் பகுதி வரை பரவியுள்ளது. இதனால் கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது என்றார் அவர்.
லட்சத்தீவிலும் பலத்த மழை
இதேபோல கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கும் பருவ மழை சூடுபிடித்துள்ளது.
இடுக்கியில் ஒருவர் பலி
இதற்கிடையே கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இடுக்கி மாவட்டம் வழவரா என்ற இடத்தில் மாவட்ட இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜோபி ஜான் என்பவர் உயிரிழந்தார். அவரது தந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டுக் காப்பாற்றினர். ஜோபியின் தாயார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பொன்முடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை கட்டுப்படுத்தி வருகிறது கேரள போலீஸ்.