பி.சி.சி.ஐ. தலைவராக மீண்டும் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் 'சீனி' மனு
டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தம் மீது எந்தத் தவறும் இல்லை என்று முட்கல் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக தாம் தொடருவதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் என். சீனிவாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த 6-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை விசாரணை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் விசாரணையின் போது ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த என்.சீனிவாசன் விலகி இருக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான முகுல் முட்கல் குழு சமர்பித்த இறுதி அறிக்கையில் சீனிவாசன் எந்த தவறும் செய்யவில்லை என்று தகவல் வெளியானது.
இதையடுத்து தன்னை மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் என்.சீனிவாசன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி அறிக்கையில் நான் ஐ.பி.எல். 6-வது போட்டியில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. என் மீது குற்றச்சாட்டு வைக்கும்படியான எந்த தகவலும் அதில் இல்லை.
இந்த அறிக்கையின் மூலம் என் மீது இதற்கு முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பது புலனாகின்றது. எனவே நான் மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவராக தொடர அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சீனிவாசன்.
சீனிவாசன் சமர்பித்துள்ள மற்றொரு மனுவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை கொண்டுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் எனது மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, இந்தியா சிமெண்ட்ஸ் மீது அறிவிக்கப்படும் எந்த ஒரு கடினமான உத்தரவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐ.பி.எல் போட்டியையும், கிரிக்கெட்டையும் பாதிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.