ஆந்திராவில் தொடரும் இழுபறியில் பாஜக- தெலுங்குதேசம் கூட்டணி!
ஹைதராபாத்: ஆந்திராவில், தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது.
தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநிலங்களில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட, பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஆந்திராவில் பலமான கூட்டணி அமையாமல் பல கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க முன்வந்தது தெலுங்கு தேசம் கட்சி. இதை பாரதிய ஜனதா ஏற்கவில்லை.
டெல்லியில் இருந்து வந்த பாஜக மேலிடத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் தெலுங்குதேசம் இறங்கி வரவில்லை. இதனால் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது. பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, தெலுங்கு தேசத்துடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி திங்கள்கிழமை டெல்லியில் கூடுகிறது. அதில் தெலுங்கானா, சீமாந்திரா கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
இந்நிலையில் தெலுங்கு தேசம் தன் முடிவை அறிவிக்க 24 மணி நேர கெடுவையும் பாஜக விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும்.. இல்லையெனில் தனித்துப் போட்டியிடலாம் என்று கூறியிருக்கிறார்.
அனேகமாக ஆந்திராவில் பாரதிய ஜனதா- தெலுங்கு தேசம் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை முறிவடையவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.