விரைவில் “இந்தியாவின் பணக்காரர்கள்” டெல்லி எம்.எல்.ஏக்கள்தான் - 50,000ஆக உயரப் போகும் சம்பளம்!
டெல்லி: டெல்லியில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் நான்கு மடங்காக உயர்த்தப்படவுள்ளது. அவர்களுக்கு தற்போதைய மாத சம்பளமாக உள்ள 12 ஆயிரம் ரூபாய் இனி 50 ஆயிரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்கட்சிகளின் தரப்பில் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கடந்த ஜூலை மாதம் டெல்லி சட்டமன்ற சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலை சந்தித்த சில எம்.எல்.ஏக்கள் தற்போது வழங்கப்படும் சம்பளம் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
வெறும் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கொண்டு வீட்டு செலவுகள், அலுவலக செலவுகள் உள்ளிட்டவற்றை சமாளிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
வல்லுநர் குழு அமைப்பு:
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் இதரப் படிகள் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்காக நான்கு பேர் கொண்ட தன்னிச்சையான வல்லுநர் குழுவை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் நியமித்தார்.
அறிக்கையில் பரிந்துரை:
இந்த குழு ஆய்வு செய்து தனது 21 பக்க பரிந்துரையை அவரிடம் அளித்துள்ளது. எம்.எல்.ஏக்களுக்கான மாத சம்பளத்தை ரூபாய் 12,000ல் இருந்து 4 மடங்காக உயர்த்தவும், தொகுதிப் படியை ரூபாய் 18,000ல் இருந்து ரூபாய் 50,000 ஆக அதிகரிக்கவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதிக சம்பளம் பெரும் எம்.எல்.ஏக்கள்:
இந்த பரிந்துரை முழுமையாக ஏற்கப்பட்டு அமல்படுத்தப்பட்டால் நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற சிறப்பை டெல்லி எம்.எல்.ஏக்களை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த குழு பரிந்துரைகளை முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கும்பட்சத்தில் டெல்லி எம்.எல்.ஏ.க்கள் இந்தியாவின் பணக்காரர்களாக மாற வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கேரளாவில்தான் கம்மி:
நாட்டிலேயே அசாம் எம்.எல்.ஏ.கள் அதிகபட்சமாக ரூபாய் 60 ஆயிரமும், குறைந்தபட்சமாக கேரள எம்.எல்.ஏக்கள் ஆயிரம் ரூபாயும் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.