சுனந்தா கொலையில் என்னை சிக்க வைக்க முயற்சி- வேலைக்காரருக்கு சித்ரவதை: அலரும் சசிதரூர்
டெல்லி: சுனந்தா மரணத்தில் என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூர் கூறியுள்ளார். தன் வீட்டு வேலைக்காரரை சித்ரவதை செய்வதாகவும் அவர் திடுக்கிடும் புகாரை எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டல் அறை எண் 345ல் சுனந்தா புஸ்கர் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
முதல் கட்ட விசாரணையில் அவரது மரணத்துக்கு விஷம் அருந்தியது தான் காரணம் என தெரியவந்தது. ஆனாலும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் நீடித்து வந்தது.
அவர் விஷம் அருந்தியதால் மரணம் அடைந்திருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
It's not just #SunandaPushkar's case. This is usually how we investigate. My #cartoon #SunandaMurdered pic.twitter.com/S2KCRGGfTa
— MANJUL (@MANJULtoons) January 7, 2015
இந்நிலையில், சுனந்தா விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்த டெல்லி காவல்துறையினர், சுனந்தா மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
இதையடுத்து, சசி தரூர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த தகவல் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சுனந்தா மரணத்தை கொலை வழக்காக காவல்துறை பதிவு செய்தது என்பதை தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். நான் எதையும் மறைக்க வில்லை. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விசாரணைக்கும் டெல்லி காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய சசி தரூர் கூறுகையில், ''சுனந்தா மரணத்தில் என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது. நானும், எனது பணியாளரும் சேர்ந்து சுனந்தாவை கொலை செய்து விட்டதாக கூறுமாறு, எனது பணியாளருக்கு போலீசார் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
எனது பணியாளரை போலீசார் விசாரித்தபோது அவரை கடுமையாக தாக்கி இதை ஒப்புக்கொள்ள சொல்லி உள்ளனர். இது குறித்து நான் கடந்த நவம்பர் மாதமே டெல்லி காவல்துறை கமிஷனர் பி.எஸ்.பாஸ்சிக்கு கடிதம் எழுதியுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
சசி தரூரின் கடிதம்
தனது வீட்டு வேலைக்காரர் நாராயண் சிங்கும், சசி தரூரும் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க நாராயண் சிங்கை டெல்லி காவல்துறையினர் அடித்து துன்புறுத்துகின்றனர் என்று டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸிக்கு நவம்பர் 12-ஆம் தேதி சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்
"7/11/2014 மற்றும் 8/11/2014 ஆகிய இரு தினங்களில் டெல்லி காவலதிகாரிகள் நடத்திய 16 மணி நேர விசாரணையில், எனது வீட்டு வேலைக்காரர் நாராயண் சிங்கை உங்களது அதிகாரிகளில் ஒருவர் தொடர்ந்து தாக்கியுள்ளார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்
மேலும், நானும் நாராயண் சிங்கும் சேர்ந்து என் மனைவியை கொலை செய்தோம் என்று அவரிடமிருந்து வாக்குமூலம் பெறவே அவர்கள் நாராயண்சிங்கை துன்புறுத்துகின்றனர் என்பது மோசமான சூழலைக் காட்டுகிறது.
இந்த நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாததும், சட்ட விரோதமும் ஆகும். அப்பாவி நபர் ஒருவரை சித்ரவதை மூலம் வாக்குமூலம் அளிக்க வைத்து குற்றம் சாட்டுவது என்ற நடைமுறை மிகமோசமானது.
எனவே, இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் உங்கள் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெல்லி காவல்துறை ஆணையர் பாஸியிடம் அவர் நவம்பர் 8-ஆம் தேதி மேற்கொண்ட தொலைபேசி உரையாடலையும் குறிப்பிட்டுள்ளார்.
சுனந்தா மரணம் குறித்த மருத்துவ அறிக்கையில் அவர் விஷம் ஏற்றப்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டதையடுத்து டெல்லி போலீஸார் கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், சந்தேகப்படும் நபராக ஒருவர் பெயரையும் இன்னும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக எழுந்துள்ள புதிய விவரங்களின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழுவை டெல்லி காவல்துறை அமைத்துள்ள நிலையில் சசிதரூரின் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.