லாலு ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு.. தேர்தலில் தலையெடுப்பதைத் தடுக்க பாஜக. தீவிரம்
பாட்னா : ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய, உச்நீதிமன்றத்தை அணுகப்போவதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முதலமைச்சராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதில் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், லாலுவுக்கு, ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர், சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பின், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, அவர் வெளியில் வந்தார்.
இந்நிலையில், பீகார் மாநில பா.ஜ.க மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறியதாவது..
ஜாமினில் வெளியில் வந்தவர்கள், எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது. ஆனால், லாலு பிரசாத் யாதவ், பகிரங்கமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
இதனால், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யுமாறு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ் தலையெடுப்பதைத் தடுக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.