பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதால் பாஜகவிலிருந்து விலகுவாரா அத்வானி?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் பாஜகவில் இருந்து விலகக் கூடும் என்று தெரிகிறது.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று தொடக்கம் முதலே போர்க்கொடி தூக்கியவர் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. அவரை சமாதானப்படுத்தும் வகையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தமது தூதராக நிதின் கத்காரியை டெல்லிக்கு அனுப்பி வைத்திருந்தது. அவரும் அத்வானியை நேரில் சந்தித்து பேசிவிட்டு நாக்பூர் திரும்பி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பேசினார்.
பின்னர் மீண்டும் டெல்லியில் இன்று காலை அத்வானியை சந்தித்துவிட்டு சுஷ்மா ஸ்வராஜூடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிதின் கத்காரி, சுஷ்மா ஸ்வராஜ், அனந்த்குமார் ஆகியோர் அத்வானியின் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் தான் கட்சிப் பணியாற்ற மாட்டேன் என்று அத்வானி கூறியிருக்கிறார். ஆனால் அவரது கருத்தை பாஜக மேலிடம் ஏற்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த அத்வானி, டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தார். இந்தக் கூட்டத்தின் முடிவில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ராஜ்நாத்சிங் அறிவித்தார்.
தற்போது நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் பாரதிய ஜனதாவில் இருந்து அத்வானி விலகக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.