3 நாட்கள் பிரதமர் பொறுப்பை வகித்த சுஷ்மா சுவராஜ்..!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், நம்பர் டூ அமைச்சரான ராஜ்நாத் சிங்கும் நாட்டில் இல்லாத நிலையில் 3 நாட்களுக்கு பிரதமர் பொறுப்பை வகித்து வந்துள்ளார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவம்பர் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை சுஷ்மாதான் பிரதமர் பொறுப்பில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் மோடி மலேசிய -சிங்கப்பூர் பயணத்தில் இருந்தார். ராஜ்நாத் சிங்கும் நாட்டில் இல்லை.

ராஜ்நாத் சிங் ஆறு நாள் பயணமாக நவம்பர் 18ம் தேதியே சீனாவுக்குப் போய் விட்டார். மோடி 21ம் தேதிதான் தனது மலேசிய - சிங்கப்பூர் பயணத்தைத் தொடங்கினார். எனவே சுஷ்மாதான் பிரதமர் பொறுப்பை வகித்துள்ளார்.
ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை மாலை டெல்லி திரும்பினார். மோடி நேற்று காலை திரும்பினார். பிரதமரும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ராஜ்நாத் சிங்கும் ஊரில் இல்லாத நிலையில் சுஷ்மா பிரதமர் பொறுப்பை வகிப்பார் என்பது குறித்த சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன் கூட்டியே அனுப்பப்பட்டிருந்ததாம்.
2014ம் ஆண்டு மே 26ம் தேதி மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக அவரும், நம்பர் டூவான ராஜ்நாத் சிங்கும் ஒரே சமயத்தில் நாட்டில் இல்லாமல் போனது இதுவே முதல் முறையாகும். முன்பெல்லாம் மோடி நாட்டில் இல்லாவிட்டால் ராஜ்நாத் சிங் பிரதமர் பொறுப்பை வகிப்பார். தற்போதுதான் முதல் முறையாக சுஷ்மா வகித்துள்ளார்.












Click it and Unblock the Notifications