பாலியல் புகார்! பிரபல சாமியாருக்கு ஆண்மை சோதனை நடத்த ஹைகோர்ட் உத்தரவு
பெங்களூரு: பாலியல் புகாரை தொடர்ந்து கர்நாடகாவில் பிரபல சாமியார் ஒருவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதியாக உள்ளவர் ராகவேந்திர பாரதி. இவரது ஆசிரமத்தின் பக்தையாக இருந்தவர் பெங்களூர் பனசங்கரியை சேர்ந்த பிரேமலதா. இவருக்கு திருமணமாகி இளம் வயதில் அம்சுமதி சாஸ்திரி என்ற பெண் பிள்ளை உள்ளது. ஆசிரமம் நடத்தும் ராமகதை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரேமலதா, ராமர் பக்தி பாடல்களை பாடிவந்துள்ளார்.
இந்நிலையில், ராகவேந்திர பாரதி சுவாமி, 2011ம் ஆண்டு ஒருநாள், பிரேமலதாவிடம் வந்து உன்மீது கடவுள் மிகுந்த அன்பு வைத்துள்ளார், உன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த அவர் சித்தமாகியுள்ளார் என்று கூறி ஆசை வார்த்தைகள் பேசியுள்ளார். இப்படியே அவ்வப்போது அவரை புகழ்ந்து வந்த சாமியார், ஒருநாள், உன்மீது கடவுளின் கிருபை இறங்கப்போகிறது என்று கூறி, ஆசிரமத்தில் தனது அறையில் வைத்து பிரேமலதாவை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதன்பிறகு, இங்கு நடந்ததை வெளியே யாரிடமும் சொல்கக்கூடாது என்று வலுக்கட்டாயமாக பிரேமலதாவிடம் சத்தியம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் சாமியார் சுற்றுப்பயணம் செய்யும்போது, பிரேமலதாவையும் அழைத்துச் சென்று அங்கு வைத்தெல்லாம் இதேபோல பலாத்காரம் செய்துவிட்டு சத்தியம் வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரத்தப்போக்கு, தலைவலி போன்ற பிரச்சினை பிரேமலதாவுக்கு அதிகரித்துள்ளது. இதை எடுத்துக்கூறியும், தனது ஆசைக்கு இணங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சாமியார், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து கோபமடைந்த பிரேமலதா தனது மகளிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அம்சுமதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம்தேதி பெங்களூர் பனசங்கரி காவல் நிலையத்தில் சாமியாருக்கு எதிராக புகார் அளித்தார். இந்த வழக்கை அரசு சிஐடி போலீசாருக்கு மாற்றியது.
இந்த புகாரை தொடர்ந்து, கர்நாடக ஹைகோர்ட்டை அணுகிய சாமியார் தரப்பு, சமூகத்தில் தனக்குள்ள நற்பெயரை கெடுக்க அப்பெண் குடும்பம் சதி செய்வதாகவும், ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்து இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரப்பட்டது. மேலும், கைது செய்வதற்கு ஸ்டே கொடுக்குமாறும் கோரப்பட்டது.
ஆனால் சாமியார் மீதான புகாருக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக கூறிவிட்ட ஹைகோர்ட் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டது. இதையடுத்து சாமியார் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்காக தன்னிடம் ஆண்மை சோதனை நடத்த சிஐடி போலீசார் முயலுவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்கப்பட்டது.
இம்மனு நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சாமியார் தரப்பு வக்கீல் ராகவன் வாதிடுகையில் "பிரேமலா ஆடையின் கண்டெடுக்கப்பட்ட விந்தணுவை வைத்து, சாமியாருக்கு ஆண்மை சோதனை நடத்தி ஒப்பிட்டு பார்க்க சிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் நித்தியானந்தா சாமியாரை போல ராகவேந்திரா தன்னை ஒரு குழந்தை என்று கூறவில்லை. எனவே இவருக்கு ஆண்மை சோதனை அவசியம் கிடையாது. எந்த மாதிரியான சோதனைகள் நடைபெற உள்ளது என்பது குறித்தும் போலீசார் தெரிவிக்க மறுக்கின்றனர். எனவே சோதனைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி வேணுகோபால் "குற்றம் சாட்டப்பட்டவர்களிடம், அவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய சோதனைகளின் விவரத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் போலீசாருக்கு கிடையாது. மருத்துவ பரிசோதனை என்பது சட்டத்திற்கு உட்பட்ட ஒரு விசாரணை முறை. எனவே அதற்கு தடை விதிக்க முடியாது. ராகவேந்திர பாரதிக்கு ஆண்மை பரிசோதனை நடத்த ஹைகோர்ட் தடை விதிக்க முடியாது" என்று கூறிவிட்டார்.
இதையடுத்து ஆண்மை பரிசோதனைக்கு தேவைப்படும் ஆயத்த வேலைகளில் சிஐடி போலீசார் இறங்கியுள்ளனர்.