பன்றிக்காய்ச்சல் இருந்தால் திருப்பதி வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்தவர்களும், நோய் அறிகுறி இருப்பவர்களும் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனவரி 26ஆம் தேதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
அன்றைய தினம் மலையப்ப சுவாமி வாகனங்களில் திருவீதி உலா வருவார். மினி பிரம்மோற்சவம் போல நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்கள் திருப்பதியில் கூடுவார்கள்.
இதனிடையே தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 21 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ள நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் நூற்றுக் கணக்கானோர் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே திருமலை திருப்பதியில் கடும் குளிர் நிலவுவதால், பன்றிக் காய்ச்சல் கிருமிகள் வேகமாகப் பரவும் ஆபத்து இருக்கிறது. இதனால், பன்றிக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டவர்களும், நோய் அறிகுறி உள்ளவர்களும் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேவஸ்தான சுகாதாரத் துறையினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் பாதிப்பு
தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தெலுங்கானாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். நேற்று மேலும் 3 பேர் உயிர் இழந்தனர். இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சலை தடுக்க தெலுங்கானா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருவதுடன், ஆங்காங்கே பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. குளிர்காலத்தில்தான் இந்த காய்ச்சல் வேகமாக பரவும். இதைத் தடுக்க முறையான உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். திரவ உணவுகள், காய்கறி மற்றும் பழங்கங்களை சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சந்திரசேகரராவ் வேண்டுகோளின்படி 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவை மத்திய அரசு ஹைதராபாத் அனுப்பி வைத்துள்ளது.