பயணிகளிடம் வரவேற்பில்லை... மும்பை விமான நிலைய ‘பெஸ்ட்’ ஏ.சி. பேருந்துகள் தற்காலிக ரத்து
மும்பை: பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மும்பை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஏ.சி. பஸ்கள் தற்காலிகமாக 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் மும்பை பன்னாட்டு விமானநிலையம் 2-வது முனையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பெஸ்ட் குழுமம் சார்பில் ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்பேருந்துகளுக்கான கட்டணமாக தானே, போரிவிலி பகுதிகளுக்கு ரூ.120-ம் சி.பி.டி. பேலாப்பூருக்கு ரூ.180-ம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்த ஏ.சி. பஸ்களுக்கு விமான நிலைய பயணிகளிடம் போதிய வரவேற்பில்லை.இதனால் பெரும்பாலான பஸ்களில் டிரைவரும், கண்டக்டரும் மட்டுமே பயணம் செய்தனர். இது நிறுவனத்திற்கு நஷ்டத்தை உண்டாக்கும் என்பதால், இப்பஸ்களை தற்காலிகமாக ரத்து செய்ய பெஸ்ட் குழுமம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பெஸ்ட் குழும பொது மேலாளர் ஓம் பிரகாஷ் குப்தா கூறியதாவது:-
போதிய வரவேற்பில்லை...
பயணிகளின் வசதிக்காக விமான நிலையத்தில் இருந்து மேற்கு புறநகர், கிழக்கு புறநகர் பகுதிகள் மற்றும் நவிமும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு வரை ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த பஸ் சேவைகளுக்கு விமான பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
விளம்பரம்...
எனவே முதலில் இந்த பஸ் சேவை குறித்து விமான பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விளம்பரம் செய்து அதை பிரபலப்படுத்த உள்ளோம். மேலும் விமான நிலையங்களிலும் டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் விமானங்களிலும் ஏ.சி. பஸ் சேவைகள் குறித்து அறிவிப்பு வழங்க விமானநிலைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டு உள்ளோம்.
இரவு நேர பயணிகள்...
மேலும் தற்போது மழைக்காலமாக இருப்பதால் விமானங்கள் நள்ளிரவு நேரத்திலேயே விமான நிலையத்தில் தரையிறங்குகின்றன. இதனால் பயணிகள் பஸ்களில் செல்ல விரும்புவது இல்லை என விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
தற்காலிக நிறுத்தம்...
ஆகவே 2 மாதங்களுக்கு போரிவிலி, தானே மற்றும் நவிமும்பைக்கு பன்னாட்டு விமானநிலையம் 2-வது முனையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஏ.சி. பஸ் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளன. அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த ஏ.சி. பஸ்கள் மீண்டும் இயக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.