தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்.. பிரணாபிடம் நேரில் வலியுறுத்திய உ.பி. எம்.பி. தருண் விஜய்!
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் உ.பியைச் சேர்ந்த பாஜக எம்.பியான தருண் விஜய்.
இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட தருண் விஜய் தொடர்ந்து தமிழுக்காக குரல் கொடுத்து வருகிறார். வட மாநிலங்களில் இவரது தமிழ் ஆர்வம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆச்சரிய அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் நேரில் மனு கொடுத்து தமிழர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் தருண் விஜய். நேற்று இது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தார் தருண் விஜய்.
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுதொடர்பாக தருண் விஜய் கொடுத்துள்ள மனுவில், தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும்.
தீர்ப்புகள் - உத்தரவுகள் தமிழில்
உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும், உத்தரவுகளும் தமிழிலேயே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இந்தி இருக்கும்போது தமிழ் ஏன் கூடாது?
பெரும்பாலான வட இந்திய கோர்ட்டுகளில் உள்ளூர் மொழியை தொடர்பு மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கும்போது ஏன் தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கக் கூடாது.
அனைத்து மொழிகளும் சமமே
வேற்று மொழி நீதிபதிகள் இருப்பதால் தமிழை ஆட்சிமொழியாக்க இயலாது என்ற வாதம் புரியவில்லை. ஏற்கக் கூடியதாக இல்லை. இந்தியாவில் அனைத்து மொழிகளுக்குமே சம மரியாதையும், கெளரவமும் அளிக்கப்பட வேண்டும்.
தமிழக கட்சிகளை மதிக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று அனைத்துத் தமிழக கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதை மதிக்க வேண்டும், ஏற்க வேண்டும். இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தருண் விஜய் கூறியுள்ளார்.