ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்து 10 பேர் பரிதாப பலி… உத்தரப்பிரதேசத்தில் சோகம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் பலியாகிய சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உ.பி. மாநிலம் மதுரா பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள், பரேய்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆற்றில் கவிழ்ந்த காரினுள், அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததோடு, இரவு நேரம் என்பதால் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றினுள் கவிழ்ந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய காரையும், 10 பேரின் சடலங்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரா-பரத்பூர் சாலையில் எஸ்யுவி சொகுசுக்காரில் மெகந்திபூர் பாலாஜி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மதுரா அருகில் சாலையில் வந்துகொண்டு போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றினுள் கார் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
காரின் டிரைவரை காணவில்லை என்று தெரிவித்துள்ள போலீசார் அவரின் உடலைத் தேடும்பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.