நீட்: மசோதா நிறைவேற்றத்தான் முடியும்.. வேறென்ன செய்ய முடியும்.. தம்பிதுரை அலட்சிய பதில்
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்ல விரும்பவில்லை என்றும் எதிர்காலத்தில் ஏதாவது செய்வோம் என்றும் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
டெல்லி: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க பிரதமர் முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை. எதிர்காலத்தில் ஏதாவது செய்வோம் என்று அதிமுக எம்பி தம்பித்துரை கூறியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்குத் தேசியப் பொது நுழைவுத்தேர்வு (நீட்) கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டே நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால், கடந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெற்றது பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் எழுதினர். எனினும் ஒராண்டுக்கு தமிழக அரசு சார்பில் விலக்கு கோராப்பட்டது. சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. எனவே, தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உடனடியாகக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும், செப்டம்பர் 4ஆம் தேதிக்குள், நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் நீட் தேர்வு விலக்கை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள் அதிர்ச்சிடைந்தனர். இது தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கடும் அலட்சியத்தோடு பேசினார். அவர் பேசியதை அதே பாணியில் தருகிறோம்.
தொடர்ந்து போராடுவோம்
சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மசோதா நிறைவேற்றித்தான் தரமுடியும் வேறு என்ன செய்ய முடியும். முதல்வர் 3 முறை பிரதமரை சந்தித்துள்ளார். தமிழக அரசின் மசோதாவை சரியில்லை என்று சொல்வதா? தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தருவோம்.
காங்கிரஸ் - திமுக
கூட்டாச்சி தத்துவத்துத்தின் படி தமிழகத்தின் உரிமைகளைப் பெற போரடினோம். காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கொண்டு வந்த தேர்வுதான் நீட். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல இப்போது எதிர்கட்சியினர் போராடுகின்றனர்.
எங்கள் மீது பழி சொல்ல வேண்டாம்
அதிமுகவின் எந்த பழியும் சொல்லக்கூடாது. இந்த பிரச்சினைக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியும் திமுகவும்தான். நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். முந்தைய அரசுகள் செய்த தவறுகளை திருத்தத்தான் போராடுகிறோம்.
குறை சொல்ல முடியாது
மத்திய அரசுடன் இணக்கமாகவே செயல்பட்டு வருகிறோம். பல நாட்கள் அமைச்சர்கள் டெல்லியில் தங்கியிருந்து விலக்கு பெற முயற்சி செய்தனர். பிரதமரும் விலக்கு அளிக்க முயற்சி செய்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்ல முடியாது.
எதாவது செய்வோம்
காங்கிரஸ் கட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் அதிமுகவை குற்றம் சொல்ல முடியாது. காவிரி பிரச்சினைக்கும் திமுகதான் காரணம். நீட் தேர்வு பிரச்சினைக்கும்தான் திமுகதான் காரணம். திமுக ஆட்சியில் இருந்த போதுதான் எல்லா பிரச்சினையும் வந்தது. எதிர்காலத்தில் எதாவது செய்ய முயற்சி செய்கிறோம் என்றும் தம்பித்துரை கூறியுள்ளார்.
தீர்ப்பை மதிப்பது கடமை
செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பவே எரிச்சலாகவே பேசினார் தம்பித்துரை. எல்லாவற்றுக்கும் காரணம் திமுக காங்கிரஸ் கட்சிதான் என்று திரும்ப திரும்ப கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது கடமை என்றும் தெரிவித்தார்.