ஓட்டு பெற ஒரே நம்பிக்கை.. லோக்சபா தேர்தல் நெருங்கும்போது ராமர் கோயில் கட்ட காத்திருக்கும் பாஜக?
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உள்ளதை போல வெளியே விளம்பரப்படுத்தும் பாஜக, அங்கு அதற்கான எந்த பணியிலும் முழு அளவில் ஈடுபடவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்போது இப்பிரச்சினையை கையில் எடுத்து இந்துக்களை தூண்டி வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு1.75 லட்சம் கியூபிக் அடி கற்கள் தேவைப்படும் என விஹெச்பி தலைவர்கள் கூறி வருகிறார்கள். 268 அடி நீளம், 140 அடி அகலம் மற்றும் 128 அடி உயரம் கொண்ட கோயிலாக இது அமைகிறது. 2 அடுக்கு மாடி கொண்டதாக கோயில் அமைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 4 மாதங்களில் இளஞ்சிவப்பு கற்கள் சுமார் 42 பிளாக்குகள் அயோத்தியியல் குவிக்கப்பட்டுள்ளன. விஹெச்பி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஒரே ஊழியர்
ஆனால், கற்களை செதுக்க ஒரே ஒரு ஊழியர்தான் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவர் பெயர் ரஜினிகாந்த். கற்களை கட் செய்ய பயன்படும் 2 பெரும் மெஷின்களும் அங்கு உள்ளன. இவை 20 வருடங்களாக அங்கேதான் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே அடுத்த ஓராண்டுக்கு மாதத்திற்கு 2 லாரிகளில் கற்கள் வந்து குவியும் என்று விஹெச்பி கூறியுள்ளது.
வாக்கு அறுவடை
ஓராண்டுக்கு பிறகே கோயில் கட்டும் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக விஹெச்பி தெரிவிக்கிறது. இதனிடையே அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கோயில் கட்டும் பணியை ஆரம்பித்து அதற்கு வரும் எதிர்ப்புகளை இந்துக்களுக்கு எதிரான எதிர்ப்பு என கூறி வாக்குகளை அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.
அக்கறை கிடையாது
"பாஜகவுக்கு நாட்டு வளர்ச்சி தொடர்பாக எந்த கொள்கையும் கிடையாது. ராமர் கோயில் விவகாரத்தை நீர்த்துபோகாமல் வைத்திருக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மத அடிப்படையில் சமூகத்தை பிரித்தாள வேண்டும் என்பதுதான் இவர்கள் எண்ணம். கோயில் கட்ட கற்கள் வந்து கொண்டுள்ளதாக இப்போது மீடியாக்களில் பாஜக பிரமுகர்கள் விளம்பரம் செய்வது அதற்காகத்தான்" என்கிறார் சமாஜ்வாதி கட்சியின் அயோத்தி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பவன் பாண்டே.
நடவடிக்கை இல்லை
பிரதமர் உ.பியிலிருந்து எம்.பியானவர். உ.பியிலும் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக இவர்கள் நினைத்தால் நாடாளுமன்றத்தில் சட்டம் இற்றியிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு தேவை இந்துக்கள் ஓட்டுக்கள்தான். இவ்வாறு பவன் பாண்டே குற்றம்சாட்டுகிறார்.