கொரோனாவுக்கு இடமில்லை.. வைரசை நுழையவிடாமல் செய்த ஒடிசா கிராமம்.. இதுவரை ஒருவருக்கும் பாதிப்பில்லை
புபனேஷ்வர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த தேசமே போராடி வரும் நிலையில், ஒடிசா மாநிலத்திலுள்ள சின்னஞ்சிறிய கிரமமான கரஞ்சாரா, நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலை ஏற்பட்டது. அந்தப் பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வருவதற்குள், கொரோனா 2ஆம் அலை இந்த ஆண்டு தாக்கியது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பு மோசமாக இருந்தது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
அதேபோல முதல் அலையின் போது, தப்பிய பகுதிகளிலும்கூட கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், நாட்டின் உள்ள வெகு சில கிரமங்கள் கொரோனாவை மிகச் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளன.
ஒடிசா கிராமம்
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சாரா கிராமம், கொரோனாவை எதிர்கொள்ளத் திணறிக் கொண்டிருக்கும் நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது. இந்த கிராமத்தில் 261 வீடுகளும், சுமார் 1,234 மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கொரோனா முதல் அலையின் போதும் சரி, தற்போதும் சரி இங்கு ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
ஒருவருக்கும் பாதிப்பில்லை
இதுவரை கிராமத்தில் உள்ள யாருக்கும் கொரோனா அறிகுறிகள் பதிவாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் 32 கிராமவாசிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனையை நடத்தியது. அப்போது அனைவருக்கும் கொரோனா நெகடிவ் என்றே முடிவுகள் வந்தன. இந்நிலையில், மாநில அரசின் கொள்கையின்படி, தற்போது இந்த கிராமத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.
ஆஷா சுகாதார ஊழியர்கள்
இந்த கிராமத்தில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஆஷா சுகாதார ஊழியர்களின் பங்கு முக்கியமானது. இக்கிராமத்தில் கொரோனா பரிசோதனை, விழிப்புணர்வு ஆகியவற்றை ஆஷா சுகாதார ஊழியர்களே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஏற்படுத்தி விழிப்புணர்வு பணிகள் காரணமாகவே கொரோனாவை இந்த கிரமம் எளிதில் வென்றுள்ளது.
போதிய விழிப்புணர்வு
இந்த கிராமத்தை கஞ்சம் மாவட்ட கலெக்டர் விஜய் குலங்கே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆய்வு செய்தார். இங்குள்ள மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் அவர் பேசினார். அதன் பிறகு கலெக்டர் விஜய் குலங்கே கூறுகையில், "கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கிராமவாசிகள் மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது முறையாக மாஸ்க்குகளை அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றுகிறார்கள் " என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா இல்லாத கிரமம்
இங்குள்ள கிராமவாசிகள் முடிந்த வரை வீடுகளிலேயே இருக்கின்றனர். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மும்பையில் வேலை செய்கின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கின்போதும், கிராமத்திற்குத் திரும்பிய இளைஞர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக 2020 முதலே கொரோனா வைரசை இந்த சின்னஞ்சிறிய கிரமம் தள்ளியே வைத்துள்ளது.