தங்க கடத்தல் புகார்: எதிர்க்கட்சிகளின் மிரட்டல்கள் வீண் முயற்சியே.. பினராயி விஜயன் பரபரப்பு பேச்சு!
கோட்டயம்: தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு என்னை மிரட்ட நினைத்தால் அது வீண் முயற்சியே என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரகம் வாயிலாக தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கடத்தலின் முக்கிய குற்றவாளியான முன்னாள் தூதரக ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
'அவருக்கு’ தொடர்பு உள்ளது! குண்டை தூக்கிப் போட்ட ’தங்க கடத்தல்’ ஸ்வப்னா சுரேஷ்! மறுக்கும் பினராயி..!
தொடர் போராட்டம்
அண்மையில் இது தொடர்பாக சிலர் தன்னுடன் பேசியதாக ஒரு ஆடியோவையும் ஸ்வப்னா வெளியிட்டிருந்தார். இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
மிரட்டல்
இந்த நிலையில் கோட்டயத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பினராயி விஜயன் பேசுகையில், சிலர் என்னை மிரட்ட பார்க்கிறார்கள். அதெல்லாம் வீண் முயற்சியே. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பும் இது போல் என் மீது வீண் புகார்கள் எழுந்தன. ஆனால் உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும்.
சிறப்பான வெற்றி
அதனால்தான் சிறப்பான வெற்றியை மக்கள் வாரி கொடுத்து எங்களை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். நம் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவோர் முன் மண்டியிட மாட்டேன். குற்றச்சாட்டுகள் கூறுவதால் போராட்டத்தில் ஈடுபடுவதால் எனக்கோ, அரசுக்கோ எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.
நம்பிக்கை
எங்கள் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். உண்மையை கண்டறிய இந்த அரசு பாடுபடும். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுத் தரும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை பினராயியை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
Recommended Video
பாதுகாப்பு ஏன்
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் வி டி சதீஷன் கூறுகையில் வாளை எடுத்தாலும் சுதந்திரமாக நடமாடுவேன் என பினராயி விஜயன் கூறியதை நினைவு கூறுகிறேன். மக்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் எதற்காக அவருக்கு அத்தனை பாதுகாப்பு தேவை என சதீஷன் தெரிவித்துள்ளார்.