10 பேர் பலியானதால் ட்ரெக்கிங்குக்கு தடை.. 10,000 பேரை பலி கொண்ட உத்தரகாண்ட் யாத்திரைக்கு தடை இல்லை?
தமிழகத்தில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மலையேற்ற ஆர்வலர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது.
டேராடூன்: குரங்கணி தீ விபத்தில் 10 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழக மலைப் பகுதிகளில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10,000 பேரை உத்தரகாண்ட் பெருவெள்ளம் பலி கொண்ட நிலையிலும் இமயமலை யாத்திரைக்கு இதுவரை தடை விதிக்கப்படவில்லையே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் மலையேற்ற ஆர்வலர்கள்.
தேனி மாவட்டம் குரங்கணி தீ விபத்து 10 பேரை பலி கொண்டது. மலையேற்றத்தின் போது காட்டுத் தீ சூழ்ந்து கொண்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் மலைகளில் மலையேற்றப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளையும் மலையேற்ற ஆர்வலர்களையும் ஆதங்கப்பட வைத்திருக்கிறது.

பனிச்சிகரம் உடைந்து வெள்ளம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இமயமலை பனிச்சிகரம் உடைந்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், முக்திநாத்துக்கு சென்ற பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மாண்டு போயினர்.

பெரும் அபாய பகுதி
இதில் 10,000க்கும் அதிகமானோர் பலியானதாக உத்தரகாண்ட் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இமயமலை பகுதியானது பனிச்சரிவு, மேகவெடிப்பு, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி.

யாத்திரைக்கு தடை இல்லை
குறிப்பிட்ட பகுதியில் இருந்து மலையேற்றம், அல்லது குதிரை மூலமாகத்தான் பயணிக்க முடியும். இத்தனை பெரிய உயிரிழப்பு நடந்த போதும் இத்தனை பெரும் அபாயம் இருந்தபோதும் இமயமலையின் 'சார் தாம்' எனப்படும் அந்த புனித யாத்திரைக்கு தடை விதிக்கப்படவில்லை.

மலையேற்ற ஆர்வலர்கள் ஆதங்கம்
இப்போது நடிகர் ரஜினிகாந்த் கூட இமயமலை யாத்திரைக்குத்தான் போயிருக்கிறார். ஆனால் 10 பேர் பலியான உடனேயே அத்தனை மலைகளிலும் மலையேற்றத்துக்கு தடை என தமிழக அரசு அறிவித்திருப்பது நகைப்புக்குரியது என்கின்றனர் மலையேற்ற ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications