சட்டசபையை முடக்கியதாக சொல்வதா? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே.வங்க ஆளுநர் பதில்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபையை ஆளுநர் ஜெகதீப் தன்கர் முடக்கியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் மேற்கு வங்க மாநில முதல்வர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாலேயே சட்டசபை கூட்டத் தொடரை முன்னதாகவே முடித்து வைத்ததாக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர், முதல்வர் மமதா பானர்ஜி இடையேயான மோதல் உக்கிரமாக உள்ளது. மேற்கு வங்க அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டசபை கூட்டம் முன் கூட்டியே முடித்து வைக்கப்பட்டது. ஆனால் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர்தான், சட்டசபையை தன்னிச்சையாக முன்கூட்டியே முடக்கி வைத்தார் என விமர்சனம் எழுந்தது. இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானாது.
மேற்கு வங்கத்தைப் போல தமிழக சட்டசபையையும் முடக்க வாய்ப்புள்ளது என அதிமுக தரப்பும் பேசியது. இதனால் ஆளுநர்களை எதிர்க்கும் மாநிலங்களில் அடுத்தடுத்து பரபரப்பு நிலவியது. இதனிடையே மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீபன் தன்காரின் நடவடிக்கைக்கு ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில், மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநில தலைமையில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என விமர்சித்திருந்தார்.

இதற்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கார் பதிலளித்துள்ளார். அதில், மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, சட்டசபையின் நடப்புக் கூட்டத் தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது. தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகிறேன். கடந்த நவம்பர் 17-ந் தேதி நிறைவடைந்த பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைக்க இம்மாதம் 11-ந் தேதி மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்ததாகவும் அதன்படி 12-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications