டெல்லி குடியரசு தினவிழாவில் பவனி வந்த தமிழக அரசின் தோடர் இன அலங்கார ஊர்தி
டெல்லி: டெல்லி ராஜபாதையில் நேற்று நடந்த நாட்டின் 67-வது குடியரசு தினவிழாவில் தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்கள் சார்பில் இந்த முறை பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் பவனி வந்தன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் இன மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் தமிழக அலங்கார ஊர்தி பவனி வந்து பார்வையாளர்களை கவர்ந்தது.
குடியரசு தினவிழாவில் அசாம், கோவா, சிக்கிம், ராஜஸ்தான், சண்டிகர், திரிபுரா, ஒடிஷா, மேற்கு வங்கம், பிஹார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் ஆகிய 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அலங்கார அணிவகுப்பு ஊர்திகள் பங்கேற்றன. இது தவிர மத்திய அமைச்சங்கள் சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றன. மூன்றாவது ஆண்டாக, இந்த முறையும் டெல்லி சார்பில் அலங்கார ஊர்தி இடம்பெற வில்லை.
நாட்டின் ராணுவ பலத்தைப் பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலாசார, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நடனங்கள், பல்வேறு மாநிலங்கள், அரசுத் துறைகளின் வளர்ச்சியைக் காட்சிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் கண்கவர் அணிவகுப்பு குடியரசு தின விழாவில் இடம்பெறும்.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும், மத்திய அரசின் அமைச்சகங்களின் வளர்ச்சியைக் காட்சிப்படுத்தும்6 அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன. மேலும், 400 கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்து படைத்தன.
தோடர் இன மக்கள்
தமிழகத்தின் "தோடர்'கள்: இந்தக் கோலாகல விழாவில் தமிழகத்தின் நீலகிரி மலை மாவட்ட பூர்விக பழங்குடி "தோடர்' இன கலாசார, பழக்கவழக்கங்களை காட்சிப்படுத்தும் அலங்கார ஊர்தி முதல் முறையாக இடம்பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் தனித்துவ அடையாளத்துடன் கூடிய வாழ்க்கை முறை, கலாசாரம், பாரம்பரியத்துடன் தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பழங்குடியின மக்கள்
விவசாயம், எருமைகள் வளர்ப்பு ஆகியவற்றை பிரத்யேக தொழிலாகக் கொண்டுள்ள தோடர் சமூகம், தமிழகத்தில் உள்ள 6 பழங்குடியின குழுக்களில் ஒன்றாகும்.
பாரம்பரிய உடை அணிவது, பழமையைப் போற்றுவது, சைவ உணவை உண்பது என பல்வேறு அடையாளங்களுடன் வாழ்ந்து வரும் தோடர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
குறிஞ்சி மலர்
தோடர்களின் கூரைவேய்ந்த கோயில், அவர்களின் விருப்ப கால்நடையான எருமைகள், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிதான ஊதா நிற குறிஞ்சி மலர், குன்றுகள் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட சுருள் முடியுடன், "தோடர்' பாரம்பரிய பூ வேலைப்பாடுகளுடன் கூடிய உடையணிந்த பெண்கள் அலங்கார ஊர்தியில் அமர்ந்தவாறு, தோடர்களுக்குரிய நடனமிட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தனர். இந்தக் குழுவில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்சமல்லி, ராஜ்நிலா, கவிதா, சம்பூ, ஜெய்சின், புனிதா, விஜயராணி, தர்மாவதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
பாரம்பரியம் மாறாத மக்கள்
தமிழகத்தில் தோடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய 1,600 பேர் மட்டுமே உள்ளனர். அனைவரும் நீலகிரியைச் சேர்ந்த பழங்குடிகள். இயற்கையை கடவுளாக நேசித்து வழிபடுகின்றனர். உருவ வழிபாடு கிடையாது. தீபம்தான் இவர்களின் தெய்வம். சைவ உணவை மட்டுமே உண்ணும் இவர்கள், எருமையை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் பால் பொருள்களைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். பாரம்பரிய "தோடா' உடையை இன்றும் விரும்பி அணிகின்றனர். இவர்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளி உலகம் அறியச் செய்யும் வகையில், குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தி இடம்பெறச் செய்துள்ளது தமிழக அரசு. இதற்கு இந்த சமுதாய மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கோவா - அசாம்
கோவா மற்றும் அசாம் மாநிலங்கள் சார்பில் உள்ளூர் நடன கலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், பொருளாதார நடவடிக்கைகள் மூலம் ஊரக வளர்ச்சியை சுட்டிக் காட்டும் வகையில் ஜம்மு-காஷ் மீர் மாநில அலங்கார ஊர்தி வடி வமைக்கப்பட்டது. ‘எனது கிராமம்; எனது உலகம்' என்ற வாசகத்தை அடிப்படையாக கொண்டு அம்மாநில ஊர்தி வடிவமைக் கப்பட்டது. மத்தியப் பிரதேசம் தனது மாநிலத்தில் உள்ள வெள்ளைப் புலியை பெருமிதம் பொங்க காண்பித்தது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சார்பில் கைராகர் கலை மற்றும் இசை பல்கலைக்கழகம் அலங்காரமாக அணிவகுத்தது.
டாக்டர் அம்பேத்கார்
சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125வது தினத்தை கொண்டாடும் வகையிலும் அவருக்கு பெருமை ஊட்டும் வகையிலும் நாடாளு மன்ற கட்டிடத்தின் மாதிரி எடுத்து வரப்பட்டது. அதில் நாட்டின் முதல் குடியரசு தலைவர் ராஜேந் திர பிரசாத்திடம் இந்திய அரசி யலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் வழங்குவது போலவும், தீண்டாமை கொடுமை தொடர்பான பிரச்சினைகளை விளக்குவது போலவும் சுட்டிக்காட்டப் பட்டிருந்து.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் சார்பில் ஊர்வலம் வந்த அலங்கார ஊர்தியில் ஓட்டுச்சாவடிகளின் மாதிரிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு வசதிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.