பெண் வேடமிட்டு விவசாயிகள் டெல்லியில் போராட்டம்... இன்னும் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க
தமிழக விவசாயிகள் 32வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பெண் வேடமிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 32வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று பெண் வேடமிட்டு போராடி வருகின்றனர்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் ஆதரவு
விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வடமாநில அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நூதனப் போராட்டம்
இந்நிலையில், பாம்பு கறி, எலி கறி தின்று தங்களது வேதனைகளை விவசாயிகள் போராட்டமாக மாற்றினார்கள். மண்டை ஓடுகள் வைத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் போராட்டங்களை நூதன முறையில் நடத்தி வருகின்றனர்.

குட்டிக் கரணம்
போராட்டத்தின் 31வது நாளான நேற்று குட்டிக் கரணம் போட்டு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குட்டிக் கரணம் போடுவது ஒன்றுதான் பாக்கி அதனையும் செய்தாகிவிட்ட நிலையில் மத்திய அரசு இப்போதாவது தங்களை திரும்பி பார்க்குமா என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெண் வேடமிட்டு..
இதனைத் தொடர்ந்து இன்று விவசாயிகள் அனைவரும் பெண் வேடமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 7000 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் வரை போராடுவோம் என்று கூறியுள்ளனர்.

உறுதி
இந்நிலையில் தங்களை டெல்லியில் இருந்து விரட்டுவதற்கு டெல்லி போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். என்ன செய்தாலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் மன உறுதியுடன் போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications