நீட் பற்றிய கேள்விக்கு 'அப்பீட்' ஆன அமைச்சர்கள்!
நீட் தேர்வுக்கான விலக்கு இந்த ஆண்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருக்கிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக அமைச்சர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர்.
டெல்லி: நீட் தேர்வுக்கான விலக்கு இந்த ஆண்டு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை தங்களுக்கு இருக்கிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்வியை அமைச்சர்கள் தவிர்த்து விட்டு ஓடிவிட்டனர்.
தமிழகத்தை பொறுத்த வரை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை 12-ம் வகுப்பு மதிப்பெண்களில் உள்ள முக்கிய பாடங்களின் கட் ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இதுவரை நடந்து வந்துள்ளது.
இந்த ஆண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு தேசிய தகுதி காண் தேர்வு எனப்படும் நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் எழுந்தது.
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் டெல்லிக்கு சென்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை இன்று சந்தித்து பேசினர்.
அந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறுகையில், நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து பரீசிலனை செய்வதாக அமைச்சர் நட்டா தெரிவித்தார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றார்.
அப்போது அவரிடம் நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற நமபிக்கை உங்களுக்கு உள்ளதா என்று நிருபர்கள் அமைச்சர்களிடம் கேட்டதுதான் தாமதம்... தலை தெறிக்க ஓடினர்.
கலக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூறாமல் அமைச்சர்கள் இப்படி அப்பீட் ஆனது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.