லஞ்ச விவகாரம்: தினகரனின் தரகர் போட்டிருந்த பிரேஸ்லெட் மட்டும் ரூ.6.5 கோடியாம்!
டெல்லி: டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டின் மதிப்பு மட்டும் ரூ. 6.5 கோடியாம்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர்(27) மூலம் தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுகாஷை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பிரேஸ்லெட்
சுகாஷ் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டின் மதிப்பு மட்டும் ரூ. 6.5 கோடியாம். அவரிடம் விலை உயர்ந்த காலணிகள் ஏராளமாக இருந்துள்ளன. மேலும் கையில் ரூ. 1.3 கோடி ரொக்கம் வைத்திருந்திருக்கிறார்.
கருப்பு பணம்
கருப்பு பணம் புழங்கப்படுவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்து ஹோட்டலுக்கு சென்றால் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.
தினகரன்
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ரூ. 50 கோடி வரை லஞ்சம் தர தினகரன் சம்மதித்தார். மேலும் என்னிடம் ஏற்கனவே ரூ.10 கோடி அளித்துள்ளார் என்று சுகாஷ் போலீசாரிடம் கூறியுள்ளார்.
கார்கள்
சுகாஷுக்கு சொகுசு கார்கள் என்றாலும் மிகவும் பிடிக்குமாம். டெல்லி ஹோட்டலில் பிஎம்டபுள்யூ மற்றும் பென்ஸ் கார் வைத்திருந்தார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் என்று எழுதப்பட்டிருந்தது.
ஏமாற்று வேலை
சுகாஷ் கடந்த 2013ம் ஆண்டு டெல்லியில் நிறுவனம் ஒன்று துவங்கி போலி இன்சூரன்ஸ் பாலிசிகள் விற்று ரூ. 3,000 கோடி சம்பாத்தித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு மோசடி வழக்கில் சுகாஷ் மற்றும் அவரது மனைவி லீனா ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.