பீகாரின் முதல் ஓரினச்சேர்க்கைத் திருமணம்: வீட்டை விட்டு வெளியேறி தம்பதிகளான தோழிகள்
பாட்னா: பீகாரில் இளம்பெண்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது பீகாரின் முதல் ஓரினச்சேர்க்கையாளார் திருமணம் எனச் சொல்லப் படுகிறது.
இளம்பெண்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். ஆனால், தோழிகள் இருவரும் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஒரு பெண்ணின் தந்தை தனது மகளை அவளது தோழி வீட்டார் கடத்தியதாக அளித்த புகாரைத் தொடர்ந்து தோழிகள் வீட்டை விட்டு வெளியேறியது வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களின் செல்போன் பேச்சுக்களின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்தைப் போலீசார் கண்டறிந்தனர்.
பீகாரிலுள்ள ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் எனும் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளம்பெண்கள் தங்கி இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கே சென்று பார்த்த போது, இளம்பெண்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விரைவில் கோர்ட்டில் ஒப்படைக்கப் பட உள்ள இந்த இளம்பெண்கள், சிறு வயது முதலே தோழிகளாம். ஒன்றாகவே கல்வியும் கற்கச் சென்றுள்ளார்கள். அப்போது உண்டான தீவிர நட்பே அவர்களைத் திருமணம் வரை கொண்டு போய் விட்டுள்ளது.