பணத்துக்காக 7வயது சிறுமியை கொலை செய்த தாய் மாமன், அத்தை கைது!
பெங்களூர்: பெங்களூரில் 7 வயது சிறுமி பணத்துக்காக கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த சிறுமியின் தாய்மாமன் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்கள். தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த, பெங்களூர் ஆஸ்டின்டவுன் பகுதியை சேர்ந்த, சையது நிசாரின் மகள் ரதிபா நிசார் (7) கொலை செய்யப்பட்ட சிறுமியாகும்.

பர்தா அணிந்த மர்ம பெண்
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 12.45 மணியளவில் சிறுமி படிக்கும் பள்ளிக்கு பர்தா அணிந்து மர்மபெண் ஒருவர் வந்துள்ளார். அவர் சிறுமியின் வகுப்பு ஆசிரியையிடம் சென்று, ‘நான் சிறுமி ரதிபா நிசாரின் சித்தி. அவளது பாட்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. எனவே அவளை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்து உள்ளேன்' என்று கூறியுள்ளார். உடனே ஆசிரியையும் சிறுமியை அந்த பர்தா பெண்ணுடன், அனுப்பி வைத்துள்ளார்.

தாய் சென்றபோது அம்பலம்
பிற்பகல் 3.30 மணியளவில் சிறுமியை அழைத்து செல்ல அவரின் தாயார் சமீனா பள்ளிக்கு வந்தபோதுதான், சிறுமி ஏற்கனவே பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று விட்டது தெரியவந்தது. இந்த நிலையில், சமீனாவின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில், ‘நாங்கள் தான் சிறுமியை கடத்தி உள்ளோம். சிறுமியை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால், எங்களுக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும். இதை மீறி போலீசில் புகார் செய்ய முயன்றால், சிறுமியை கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

போலீசில் புகார்
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் தனது உறவினர்களுடன் அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டனர். கடத்தல்காரர்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரண நடத்தினார்கள்.

தா(நா)ய் மாமன் மீது சந்தேகம்
விசாரணையின்போது, சிறுமியின் தாய்மாமன் சல்மான் (28), அவரது மனைவி சப்ரின் (20) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர். விசாரணையில், சிறுமியை கடத்திக் கொலை செய்து விட்டதாக திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

துபாய் பணத்துக்காக கடத்தல்
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தாய் மாமன் குடும்பத்தில் சதி திட்டம் வெளியே வந்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சிறுமி ரதிபா நிசாரின், தந்தை சையது நிசார் துபாயில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் தான் அவர் இந்தியாவுக்கு வந்தார். சையது நிசாரிடம் பணம் அதிகமாக இருப்பதை அறிந்த சல்மான், அவரது மகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.

துப்பட்டாவால் கொலை
அதன்படி, தனது மனைவியின் உதவியுடன் சிறுமியை கடத்தி வந்துள்ளார். பின்னர் சிறுமி தங்களை அடையாளம் சொல்லிவிட்டால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து, அவளது கழுத்தை துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்து உள்ளனர். அதன்பிறகே அவர்கள் பணம் கேட்டு சிறுமி ரதிபா நிசாரின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர். தனது மீது சந்தேகம் வராமல் இருக்க, போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்ய சென்றபோது, சல்மானும் உடன் சென்று உள்ளார். ஆனாலும், போலீசாரின் தீவிர விசாரணையில் சல்மான் சிக்கிக் கொண்டார்.

உடல் மீட்பு
சல்மான் கொடுத்த தகவலின் பேரில், பாரதி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த, சிறுமி ரதிபா நிசாரின் உடலை மீட்டனர். மேலும் சல்மானின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் நடந்த 10 மணி நேரத்துக்குள் கொலையாளிகளை கைது செய்த போலீசாரை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவுராத்கர் நே பாராட்டினார்.












Click it and Unblock the Notifications