உத்தரப்பிரதேச இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி ராணுவ வீரரா?
Recommended Video
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டத்தில் பசு பாதுகாவலர்களால் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக புதிய துப்பு கிடைத்துள்ளது.
இந்த கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில், ராணுவ வீரர் ஒருவர் சுபோத்குமாரை சுட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஜீத்து ஃபௌஜி என்னும் அந்த வீரர் ஸ்ரீநகர் பகுதியில் பணிபுரிகிறார். இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டை சுட்டது ஜீத்து தானா என்பதைக் கண்டறிய இரண்டு போலீஸ் குழுக்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் விரைந்துள்ளனர்.
கலவர விடியோவில் ஜீத்து உள்ளது குறித்து அவர் குடும்பத்தாரிடம் கேட்டபோது அவர் சம்பவ இடத்தில் இருந்தது உறுதியாகியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து திரும்பிய ஜீத்து " நாடகத்தை பாருங்கள்" என்று கூறிவிட்டு அன்றயை தினம் மாலையே கார்கிலுக்கு புறப்பட்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கலவரம் தொடர்பாக 4 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட நேரத்தில் சுபோத் அருகில் ஜீத்து போன்ற ஒருவர் உடனிருந்துள்ளார். தன் மகன் இன்ஸ்பெக்டரை கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய ஜீத்துவின் தாயார் " ஒரு வேளை என் மகன் அவரை கொலை செய்திருந்தால் அதற்கான தண்டனையை அவன் பெற வேண்டும்" என்றார்.