மின்சாரம் தாக்கிய பெண்ணை 72 மணி நேரம் மண்ணில் புதைத்து சிகிச்சை - உ.பி.யில் விபரீதம்
லக்னோ: மின்சாரம் தாக்கிய பெண்ணை சுமார் 72 மணி நேரம் மண்ணில் புதைத்து வைத்து கிராம மக்கள் சிகிச்சை அளித்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் மாவட்டம் சுக்தாபூரை சேர்ந்தவர் ராம் காலி பிரஜாபதி (34). கடந்த ஞாயிறு அன்று மாலை பிரஜாபதியை மின்சாரம் தாக்கியது. உணர்வற்ற நிலையில் கிடந்த பிரஜாபதியை கிராமமக்கள் மண்ணில் புதைத்துள்ளனர்.
தலை மட்டும் வெளியில் தெரியும் படி மண்ணில் புதைக்கப் பட்ட பிரஜாபதி, நேற்று காலை வரை அதே நிலையில் இருந்துள்ளார். இது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெய்ராம் ரவுத் என்ற கிராமவாசி மீடியாக்களுக்கு தகவல் அளித்தார்.
மீடியாக்களில் செய்தி வெளியானதையடுத்து, நேற்று காலை பிரஜாபதி மண்ணில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.
மின்சாரம் தாக்கியதால் அசைவற்ற நிலையில் இருந்த பிரஜாபதியின் உடலில் நேற்று அசைவுகள் தெரிந்ததையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரஜாபதியின் கணவர் கூறுகையில், ‘இது போன்று நாங்கள் நிறைய பேர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது எங்களுக்கு புதியது இல்லை. நாங்கள் அவரது உயிரை காப்பாற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ஏற்கனவே நாங்கள் இதுபோன்று சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்தோம். அவன் தற்போது நன்றாக உள்ளான். மின்சாரம் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த முறையே சரியானது'. என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே மீடியாக்களின் செய்தி வெளியானதை அடுத்து போலீசுக்கு பயந்தே கிராம மக்கள் பிரஜாபதியை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. ‘இது மிகவும் தவறானமுறை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்' என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களின் துணை கொண்டு செவ்வாய் கிரகத்தை தொடும் வகையில் நாடு முன்னேறியுள்ள நிலையில், மின்சாரம் தாக்கியதற்காக பெண் ஒருவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் உத்திரப்பிரதேச மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.