நகரமயமாக்கல் தடுக்கப்படாவிட்டால்.. பேரழிவுகளையும் தடுக்க முடியாது... வெள்ளங்கள் கற்றுத் தந்த பாடம்!
- ராஜாளி
சென்னை: கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது என்பது இப்போது சென்னையில் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்துகொண்டிருக்கும் மனிதர்களில் எத்தனை பேருக்கு நினைவு இருக்கும் என்பது தெரியவில்லை. வெள்ளம் வந்த அந்த நாட்களில் உயிரை இழந்தோம், உடமையை இழந்தோம், சென்னைக்கு தமிழகத்தின் அத்தனை பகுதியிலிருந்தும் உதவிக்கரங்கள் நீண்டன. சென்னையைத் தாண்டியும் மனித நேயத்தோடு உதவியின் கைகள் உயரமாய் தாண்டி வந்து சென்னையின் கண்ணீரை துடைத்தது.
இயற்கைப் பேரிடரா அல்லது ஆண்ட அரசின் அலட்சியமா அல்லது அரசி போதுமான உத்தரவுகளை அதிகாரிகளுக்கு தேவையான நேரத்தில் வழங்காமல் இருந்தாரா என்றெல்லாம் தொண்டை தண்ணீர் வற்ற வற்ற விவாதித்து சோர்ந்தோம். அதன் பின்னர் பணக்காரன் ஏழை, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, என்றெல்லாம் பார்க்காமல் அனைவரையும் ஒருசேர வீதிக்கு கொண்டு வந்த விதியை நினைத்து நொந்தாலும் வெள்ளம் அனைவரையும் ஒன்றிணைத்து விட்டது என்று ஆனந்தம் கொண்டோம். மொழி, இனம் கடந்து உதவியவர்கள் நம் கண்களுக்கு கடவுளர்களாக தெரிந்தனர், அதனால் ஆர்பரித்தோம்.
வதந்தியை விட தந்தி வேகத்தில் பரவிய உதவும் எண்ணங்களை, நபர்களை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தோம். கேலியும் கிண்டலும் பொறுப்பற்ற தனமும்தான் இவர்களிடம் இருக்கும் என்று சமூகம் முத்திரை குத்திய இளைஞர்கள் அப்போது ஆபத்பாந்தவர்களாய் அசகாய சூரர்களாய் தெரிந்தார்கள், பேரானந்தம் கொண்டோம். அருகே வந்தால் நாற்றமடிக்கும் என்றெண்ணி விலகிய மீனவத் தோழர்களின் தோள்களில் ஏறி உயிர்பிழைத்தபோது நம்மையே எண்ணி நாணம் கொண்டோம். ஆடியிலும், பி எம் டபிள்யு விலும் பறந்து செல்ல போதுமான சாலை இல்லையே என்றெண்ணியவரெல்லாம் நடந்து செல்ல ஒரு வழி கிடைக்காதா என்றெண்ணி ஏக்கமடைந்தோம்.
அண்டை அயலாருடன்
தொலைக்காட்சி தொல்லை இல்லாமல், ஸ்மார்ட் போன் சங்கதிகள் இல்லாமல், சீரியல்கள் இல்லாமல் வீட்டு நபர்களோடு அளவளாவி மகிழ்ந்தோம். எங்கெங்கிருந்தோ வந்த நிவாரணப் பொருள்களின் மீதெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினரை ஸ்டிக்கர் பாய்ஸ் என்று கிண்டலடித்து மகிழ்ந்தோம். அரசின் நிர்வாகத்திறமையின்மையால் ஏற்பட்ட இந்த பேரழிவுக்கு அடுத்த தேர்தல் வந்தால் பாடம் புகட்டுவோம் என்று சூளுரைத்தோம்.
பள்ளிகள் கற்றுத் தராத பாடங்கள்
பள்ளிக், கல்லூரிகள் கற்றுத் தராத பாடங்களை மாணவர்கள் இந்த நாட்களில் சமூகக் கல்வியாக மனித நேயக் கல்வியாக கற்றுத் தேர்ந்தார்கள் என்று கர்வம் கொண்டோம். ஒவ்வொரு தனி மனிதனும் நிறுவனமானான், பல நிறுவனங்கள் மனித நேயம் கொண்டது அதனால்தான் விரைந்து செயல்பட முடிந்தது என்பதையும், அரசோ அரசியல்வாதிகளோ இந்தப் பேரிடரிலும் இப்படித்தான் இருப்பார்கள் அவர்களை எப்போதும் திருத்த முடியாது என்பதையும் கண்டுணர்ந்தோம்.
எல்லாவற்றையும் மறந்து விட்டோம்
எல்லாம் சரி இவையனத்தையும் அடுத்தடுத்த மாதங்களில் மறந்தும் விட்டோம். இனியொரு வெள்ளம் வந்தால் அதை தாங்கும் அளவுக்கு நமது நகரத்தை சரி செய்ய நாம் ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டோமா என்றால் நமக்கு அதற்கு நேரமும் இல்லை, நடந்த சம்பவங்கள் நம்மில் பலருக்கு நினைவிலும் இல்லை. சரி அரசு அதற்கான திட்டமிடல்களில் ஏதாவது செய்திருக்கிறதா என்றால் அதுவும் மில்லியன் டாலர் கேள்வியே.
தண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்
இப்போது கடவுளின் தேசமான கேரளா ஒரு நூற்றாண்டு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அரசின் கணக்குப்படி 300 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 700 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 17ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றிற்கு என்ன காரணம் என்று துப்பு துலக்கினால் இயற்கைக்கு எவ்வித இடரும் வந்து விடக் கூடாது என்றெண்ணும் கேரளாவிலேயே நதிகளின் பாதைகள் ஆக்ரமிக்கப்பட்டு, மணல் திருட்டும், வன அழிப்பும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதுதான் இந்தப் பேரிடருக்கு காரணம் என்கிறார்கள் நீரியல் வல்லுனர்கள்.
மணல் கொள்ளையர்கள்
தமிழ்நாட்டிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. கேரளாவிலேயே மணல்திருட்டு நடைபெறுகிறது என்றால் இங்குள்ள நிலையை சொல்ல வேண்டியதே இல்லை. அரசியல், ஆட்சியதிகாரம் போன்றவற்றின் அனைத்து ஆசிர்வாதங்களோடு கன ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மணல் வியாபாரம். தமிழகம் முழுவதும் உள்ள நதிகளில் தண்ணீருக்கு பதிலாக மணல் லாரிகளே வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 3 முறை முழுக் கொள்ளளவை எட்டியும் கடை மடைக்கு இன்னும் தண்ணீர் தடம் பதிக்கவே இல்லையென்றால் நீர் மேலாண்மையில் தமிழகம் எப்படி தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை இன்னமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தின் பெரும்பான்மையான அரசுக் கட்டிடங்களும், பேருந்து நிலையங்களும் குளங்களை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளன. இன்னமும் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. ஏரிகள் எல்லாம் ஏரியாவாக மாறிப் போனதன் விளைவு தண்ணீர் தனக்கான இடம் தேடி அலைந்து மனிதனை அழித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு மணி நேரம் மழை பெய்தால் போதும்
இப்போதைய நிலவரப்படி கேரளாவில் பெய்தது போன்ற மழை அல்ல ஒருமணி நேரம் விடாமல் மழை பெய்தாலே சென்னையில் நம்மால் நடமாட முடியாத அளவுக்கு சாலைகள் எல்லாம் கால்வாய்களாக உருமாறி விடுகின்றன. நிலைமை இப்படியே நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 16 ஆயிரம் பேர் நீரினால் உயிரிழப்பார்கள் என்று கட்டியம் கூறுகிறது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம். அதிர்ச்சி தரும் எச்சரிக்கையை விடுத்த அந்த ஆணையம் அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறது. எந்தவித பேரிடராக இருந்தாலும் அதை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. இருந்தும் என்ன பயன் அந்தப் பேரிடரை எதிர்கொள்ளும் விதத்தில் நடவடிக்கைகளை எடுக்க நமது அரசாங்கம் தயாராக இல்லை என்பதுதான் எதார்த்தம்
வீங்கி வரும் நகரங்கள்
தொடர்ந்து வீங்கும் நகரங்களால் இத்தகையப் பேரழிவுகளை தடுக்கவே முடியாது. தடுக்க வேண்டிய அரசும் தகுந்த திட்டமிடல் இல்லாமையால் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நகரமயமாக்கல் தொடர்ந்தால் நகரங்கள் நரகங்கள் ஆவதை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது என்பது மட்டும் நிச்சயம்.