மோடி விவகாரத்தில் இறங்கி வரவில்லை: அமெரிக்கா
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பாஜக பிரமதர் வேட்பாளர் மோடி விவகாரத்தில் இறங்கி வரவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளை போன்று இல்லாமல் இந்த ஆண்டு இந்தியாவில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள 2013ம் ஆண்டுக்கான மனித உரிமை நடைமுறைகள் அறிக்கையில் குஜராத் முதல்வர் மோடியின் பெயர் இல்லை.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சாகி கூறுகையில்,
மோடி விவகாரத்தில் அமெரிக்கா இறங்கி வரவில்லை. இந்தியாவில் நடக்கும் சமூக வன்முறை சம்பவங்கள் குறித்த எங்களின் நிலை தெளிவாக உள்ளது. எங்களிடம் புதிய கொள்கையோ அல்லது கொள்கை திருத்தமோ இல்லை. மோடியின் விசா விவகாரம் குறித்து உங்களுக்கு தெரிவிக்க ஒன்றும் இப்போதைக்கு இல்லை.
மோடியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் சந்தித்து பேசியதை வேறு எதனுடம் தொடர்புபடுத்த வேண்டாம். வரும் மே மாதம் இந்தியாவில் தேர்தல் நடக்கவிருப்பதால் பல்வேறு அதிகாரிகளை நாங்கள் சந்தித்து வருகிறோம் என்றார்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக அமெரிக்கா மோடிக்கு கடந்த 2005ம் ஆண்டு முதல் விசா கொடுக்க மறுத்து வருகிறது. அதில் இருந்து மோடியும் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்க செயலாளர் ஜான் கெர்ரி வெளியிட்ட மனித உரிமை அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் மனித உரிமைகள் பிரச்சனை என்றால் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்கள், அதில் கொலை, சித்ரவதை, பாலியல் பலாத்காரமும் அடங்கும், அரசின் அனைத்து தரப்பிலும் பரவியுள்ள ஊழல், இதனால் நீதி மறுக்கப்படுகிறது. திடீர் என்று மாயமாவது, சிறையில் போதிய வசதி இல்லாதது உள்ளிட்டவை பிற மனித உரிமை பிரச்சனைகள் ஆகும்.
சில மாநிலங்களில் மதமாறுதலை சட்டம் அனுமதிப்பதில்லை. இது தொடர்பாக கைது நடவடிக்கைகள் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஊழல் எங்கும் உள்ளது. பலாத்காரம், கொடுமை, வரதட்சணை கொலைகள், கௌரவ கொலைகள், பாலியல் அத்துமீறல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
2002ம் ஆண்டில் குஜராத் கலவரத்தின்போது குற்றங்கள் செய்த போலீசார் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் குறித்த வழக்கில் அரசு சில முன்னேற்றத்தை கண்டுள்ளது. இருப்பினும் கலவரத்தின்போது மக்களை குஜராத் மாநில அரசு காக்க தவறியது சமூக ஆர்வலர்களின் தொடர் அக்கறையாக உள்ளது. அரசு மக்களை பாதுகாக்க தவறியதால் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.