ஓவர் குடைச்சல்.. அமைச்சர் பதவியில் இருந்து ஹரக்சிங் திடீரென நீக்கம்.. உத்தரகாண்ட் முதல்வர் அதிரடி..!
டேராடூன்: உத்தரகாண்டில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக உறுப்பினர் பதவியில் இருந்தும் ஹரக் சிங் ராவத் திடீரென நீக்கப்பட்டுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... இதையடுத்து, ஹரக்சிங், காங்கிரஸில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, புஷ்கர் சிங் தலைமையில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது.. ஆனால், இந்த ஒருவருடத்தில் 3 முதலமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களுக்கு, வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க போகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன.. அப்படியானால் 36 தொகுதிகளை எந்த கட்சி கைப்பற்றுகிறதோ, அதுதான் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
சாமியார்களின் ஹரித்வார் வன்முறை பேச்சு- உத்தரகாண்ட், டெல்லி அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
வியூகங்கள்
எனவே இதை மையமாக வைத்து பிரச்சாரங்களும் வியூகங்களும் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.. ஆட்சியை விட்டுவிடக்கூடாது என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. பாஜகவை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கங்கணம் கட்டி வருகிறது.. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 60 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜக நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறது.. அநேகமாக வரும் 25ம் தேதி தன்னுடைய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக
ஆனால், பாஜகவில் ஏகப்பட்ட உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது.. இன்னும் தேர்தலே ஆரம்பிக்காத நிலையில், தேர்தல் தேதி அறிவித்துவிட்ட நிலையில், கட்சிக்குள் பூசல் வெடித்து வருகிறது.. அந்த வகையில், அமைச்சராக இருந்த ஹரக் சிங் ராவத்தை, கட்சியில் இருந்து நீக்கி உள்ளது பாஜக.. ஹரக் சிங்கை அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்து, முதல்வர் புஷ்கருக்கும் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கட்சி தலைவர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஹரக்சிங், நீக்கப்படுவதாக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஷதாப் ஷம்ஸ் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்?
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக, முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஹரக்சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், உண்மையிலேயே என்ன காரணம் என்று தெரியவில்லை.. தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஹரக் சிங் சீட்டு கேட்டு, கட்சியை நெருக்கி வந்ததாக தெரிகிறது.. அதாவது, கோட்வார் தொகுதி எம்எல்ஏவாக உள்ள ராவத், தன்னுடைய மருமகள் அனுக்ரிதி குசேன் தேர்தலில் போட்டியிட பாஜகவிடம் சீட் கேட்டு நெருங்கி வந்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ்
இதைதவிர, காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருந்து வருவதாகவும் செய்திகள் கசிந்து வந்தன.. இதன்காரணமாகவே கட்சியில் இருந்து பாஜக நீக்கியிருப்பதாக பிடிஐ தெரிவித்துள்ளது... ஆனால், முன்னதாக, ஹரித்வாரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய போவதாக ஹரக்சங் சமீபத்தில் தான் மிரட்டல் விடுத்திருந்தார்.. இப்போது கட்சியே அவரை நீக்கிவிட்டது..
பரபரப்பு
தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதால், ஹரக்சிங் கடுமையான அதிருப்தியில் இருக்கிறாராம்.. அப்படியானால், இவர் உண்மையிலேயே காங்கிரஸ் பக்கம் தாவ போகிறாரா? இவரை பற்றி கசிந்து வந்த தகவல்கள் எல்லாம் உண்மைதானா? என்று தெரியவில்லை.. ஆனால், தேர்தல் நடக்க இருப்பதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அமைச்சர் பதவி, உறுப்பினர் பதவி போன்றவற்றில் இருந்து ஹரக்சிங் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பையும், சலசலப்பையும் கிளப்பி விட்டு வருகிறது.