கமல் மீதான வழக்கு... 22-ம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணை
வாரணாசி: இந்து வலதுசாரிகளின் தீவிரவாதம் குறித்து கட்டுரை எழுதிய கமல் ஹாஸனுக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு வரும் நவம்பர் 22-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், இந்து வலதுசாரியினர் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கமல் ஹாசன் கருத்துக்கு பாஜக, சிவசேனா மற்றும் சங் பரிவார் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமலுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கமல்ஹாசன் மீது உத்தரபிரதேசத்தில் பனாரஸ் போலீசார் வழக்குப் பதிவுசெய்து உள்ளனர்.
கமலேஷ் சந்திர திரிபாதி என்ற வக்கீல், வாரணாசியில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், கமல் ஹாசன் தெரிவித்த கருத்துகள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி இருப்பதாகவும், எனவே அவர் இதுபோன்ற கருத்துகளை இனிமேல் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இந்த மனு மீது வருகிற 22-ம் தேதி விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.