டிமிக்கி கொடுத்த ஐடி சிட்டி மக்கள்.. பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு
பெங்களூர்: தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஆனால் வாக்காளர்கள் ஆர்வம் காட்டாததால், வாக்குப்பதிவு 40 சதவீதத்தை ஒட்டியே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி 198 வார்டுகளை கொண்டது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பாஜக முதன்முறையாக காங்கிரஸ் வைவசம் தொடர்ந்து இருந்து வந்த மாநகராட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் பி.என்.ஸ்ரீநிவாச்சாரி இதற்கான ஏற்பாடுகளை முழு அளவில் செய்திருந்தார். இதில் பொம்மனஹள்ளி பகுதியிலுள்ள ஹொங்கசந்திரா வார்டில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். எனவே எஞ்சிய 197 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு, மாலை 5 மணிவரை நடைபெற்றது. சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூரில் வாக்காளர்கள் எண்ணிக்கை 73 லட்சத்து 88 ஆயிரத்து 256 பேராகும். வாக்குப்பதிவுக்காக நகரில் 6759 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
#Register or update your details on the #voterslist ahead of #BBMPelections - http://t.co/XeGoVsPLw8 #bengaluru #BBMP pic.twitter.com/Og3oQNmuyP
— Citizen Matters (@citizenmatters) February 19, 2015
இத்தேர்தலில் மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கும், மாநகராட்சியை ஆளும் பாஜகவுக்குமே நேரடி போட்டி இருந்தது. தேவகவுடாவின் மஜத 3வது இடம்பிடிக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த மாநகராட்சி தேர்தலில் 44 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவானது. இம்முறை வாக்குப்பதிவு எண்ணிக்கையை உயர்த்த தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்து வந்தது. இருப்பினும் இன்று வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. நேற்று மாலை முதல் தொடங்கிய மழை இரவு விடிய விடிய கொட்டி தீர்த்ததால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கடும் குளிர் நிலவுகிறது. எனவே மக்கள் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு வீட்டுக்குள் முடங்கியிருந்தனர்.
எனவே காலை 9 மணிவரையில் வெறும் 3.5 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. மதியத்துக்கு மேல் வாக்கு சதவீதம் கூடும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது. சனிக்கிழமை விடுமுறை தினத்தன்று வாக்குப்பதிவு நடைபெற்றதால், நேற்றே பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதும் வாக்குப்பதிவு குறைய காரணம்.
மைசூர், ஊட்டி போன்ற ஊர்களுக்கு பெங்களூர்வாசிகள் பலர் சுற்றுலா சென்றுவிட்டனர். அந்த நகரங்களுக்கு வந்த பல கார்களின் பதிவு எண்கள் பெங்களூருடையதாக இருந்தது. அதேநேரம் தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும், காந்திநகர், சாந்திநகர், கோவிந்தராஜ நகர், விஜயநகர் சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு பிற பகுதிகளை ஒப்பிட்டால் அதிகமாக இருந்தது.
மாலை 3.45 மணி நிலவரப்படி, 33 சதவீதம், வாக்குப்பதிவு ஆகியிருந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகவில்லை. இருப்பினும், மாலையில் நகரின் பல பகுதிகளில் மழை பெய்ததால், வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனவே, வாக்குப்பதிவு 40 சதவீதத்தை ஒட்டியே இருக்கும் என்று கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு அதிகமாக இருந்திருந்தால் பாஜகவுக்கு சாதகம் என்றும், குறைவாக இருப்பதால், காங்கிரசுக்கு சாதகம் என்று கர்நாடக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் முடிவுகள் வரும் 25ம் தேதி, செவ்வாய்க்கிழமை வெளியாகிறது.