10 கோடி புதிய வாக்காளர்கள்... ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை
டெல்லி: நடைபெற உள்ள 16வது லோக்சபா தேர்தலில் சுமார் 10 கோடி புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் நேரத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.
15வது லோக்சபாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதைத் தொடர்ந்து 16வது லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் ஓட்டுப்பதிவை சுமூகமாகவும் அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான முன் ஏற்பாடுகளில் தலைமை தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் அதிகரித்துள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது போல, தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தையும் அதிகரிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
விழிப்புணர்வு...
சமீப காலமாக தேர்தல்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பது அதிகரித்துள்ளது. வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டிருப்பது தான், அதிக வாக்காளர்கள் வருகைக்கு காரணமாக கூறப்படுகிறது.
அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை...
கடந்த பொதுத் தேர்தலில் 71 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்தது. ஆனால், இந்த தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 10 கோடி உயர்ந்து 81 கோடியே 40 லட்சமாக உள்ளது.
விரைந்து வாக்களிக்க...
இதனால் வாக்குச்சாவடிகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் திட்ட மிடப்பட்டுள்ளது. அதேபோல், பதற்றமான பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வந்து விரைவாக வாக்களித்து விட்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில்...
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலின் போது யாரும் எதிர்பாராத வகையில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்தது. வாக்காளர்கள் இரவு 8 மணி வரை நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர்.
எதிர்பார்ப்பு...
எனவே வரும் லோக்சபா தேர்தலிலும் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக புதிய இளம் வாக்காளர்கள் சுமார் 10 கோடி பேரில் 99 சதவீதம் பேர் நிச்சயம் ஓட்டுச்சாவடிக்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வாய்ப்பு...
வாக்காளர்கள் வருகை அதிகரிக்கும்பட்சத்தில் வாக்காளர்கள் அனைவருமே வாக்களிக்கும் வகையில் ஓட்டுப் பதிவு நடைபெறும் நேரத்தையும் அதிகரிக்க தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
கொளுத்தும் கோடைகாலம்...
நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் காலத்தில் நடைபெற இருப்பதால், காலை நேரத்தில் அல்லது பிற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்க திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
வாக்குப்பதிவு நேரம்...
பொதுவாக ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வடகிழக்கு மாநிலங்களிலும், மலை வாழ் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.
10 மணி நேர வாக்குப்பதிவு...
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவை தொடங்கி மாலை 8 மணி வரை நடத்தினால் 10 மணி நேரம் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தலாம். இது எல்லா வாக்காளர்களும் வாக்களிக்க போதும் என்று கருதப்படுகிறது.
கூடுதல் நேரம்...
இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஓட்டுப்பதிவுக்கான நேரத்தை அதிகரிக்க தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே ஓட்டுப்பதிவு நேரத்தை கூடுதலாக 1 மணி நேரம் அதிகரிப்பது பற்றி தலைமை தேர்தல் கமிஷன் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது.
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்...
இது தவிர மாலை 5 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு வந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் அனைவருக்கும் எத்தனை மணி நேரமானாலும் வாக்களிக்க வாய்ப்பு கொடுப்பது என்றும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் இந்த தடவை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.