"தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்க பிணத்துக்கு அடியில் படுத்தோம்"- இந்தியா திரும்பியவர்கள் கண்ணீர்
டெல்லி: ஈராக்கில் புனித பயணம் மேற்கொண்டிருந்த இந்திய முஸ்லிம்கள், அங்கு நடைபெற்ற தாக்குதல்களில் இருந்து தப்பிக்க சடலங்களுக்கு அடியில் ஒழிந்து மறைந்து வாழ்ந்ததாக தெரிவித்தனர்.
ஈராக்கிலுள்ள கர்பலா, நஜாப் போன்ற இஸ்லாமிய புனித தலங்களுக்கு இந்தியாவிலிருந்து பல முஸ்லிம்கள் சென்றிருந்தனர். திடீரென சன்னி ஆதரவு இஸ்லாமிய தீவிரவாதிகள், அடுத்தடுத்து பல நகரங்களை கைப்பற்றியதால் இந்திய முஸ்லிம்கள் அவர்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டனர்.

இருப்பினும் சிலர் எப்படியோ குண்டுக்கு இரையாகாமல் தப்பிப்பிழைத்து தாயகம் திரும்பியுள்ளனர். ஈராக்கில் இருந்து தப்பி பிழைந்து மனைவி, மகளுடன், டெல்லி திரும்பியுள்ள ஜபார் ஹசன் நக்வி, கூறுகையில், "ஈராக்கில் தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
பெண்கள், பதின்ம வயது குழந்தைகளை கூட அவர்கள் விட்டுவைப்பதில்லை. அவர்கள் செல்லும் வழியில் யார் வந்தாலும் சுட்டுக்கொலை செய்கிறார்கள். நானும் எனது குடும்பத்தாரும், அதுபோன்ற ஒரு கூட்டத்திடம் மாட்டிக்கொண்டோம்.
அப்போது, பிணங்களுக்கு அடியில் ஒழிந்து கொண்டு இறந்துவிட்டதுபோல நாடகமாடினோம். நல்லவேளையாக பாதுகாப்பு படை வீரர்கள் அதற்குள் வந்து தீவிரவாதிகளை விரட்டியடித்தனர்" என்றார்.
ரிஜ்வி என்ற மற்றொரு பயணி கூறுகையில், "ஈராக்கின் அனைத்து தெருக்களும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இரவுகள் முழுக்கவும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ளும் கர்பலா, நஜாப் நகரங்களையும், தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications