அவசரப்பட்டுவிடாதீர்கள்.. சொன்னதை செய்வோம்.. ஆந்திர முதல்வரிடம் சமாதானம் பேசிய அருண் ஜேட்லி
தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கட்சி வைத்து இருக்கும் கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
ஹைதராபாத்: பாஜக கட்சிக்கு தென்னிந்தியாவில் இருக்கும் முக்கியமான நண்பன் என்றால் அது தெலுங்கு தேசம் கட்சி மட்டும்தான். தென்னிந்தியாவில் பாஜக உருவாக்கி இருக்கும் பெரிய கூட்டணி அது மட்டுமே.
இந்த நிலையில் அந்த கூட்டணியில் பெரிய பிளவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. 2018 பட்ஜெட் காரணமாக இந்த பிரச்சனை உருவாகியுள்ளது.
தற்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்திரபாபு நாயுடுவிடம் சமாதானம் பேசும் நிலைக்கு சென்று இருக்கிறார்.
பட்ஜெட்
இந்த பட்ஜெட்டில் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலத்திற்கும் பெரியதாக எதுவும் செய்யப்படவில்லை. தேர்தல் நடக்க இருக்கும் கர்நாடகாவிற்கு மட்டும் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தென்மாநிலங்களில் பெரிய எதிர்ப்பு உருவானது.
பிரிவு
இதனால் ஆந்திராவில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள இருக்கிறது என்று கூறப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் கூறப்பட்டது. இது பாஜக கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவசர கூட்டம்
தெலுங்கு தேசம் நேற்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் பாஜகவுடன் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இப்போதைக்கு எந்த விதமான முடிவும் அவசரப்பட்டு எடுக்கப்படமாட்டாது என்று தெலுங்கு தேசம் கூறியுள்ளது. அதே சமயம் பாஜகவிற்கு ஆதரவாகவும் பேசவில்லை.
அருண் ஜேட்லி
தற்போது அருண் ஜேட்லி இதுகுறித்து தொலைக்காட்சி பேட்டியில் பேசியுள்ளார். அதில் ''தெலுங்கு தேசம் கட்சி அவசரப்படக்கூடாது. ஆந்திராவுக்கு நாங்கள் தனியாக திட்டங்கள் வைத்து இருக்கிறோம். நாங்கள் சொன்ன நலத்திட்டங்கள் அனைத்தும் செய்வோம். 2018 பட்ஜெட்டை எங்கள் வாக்குறுதியுடன் குழப்பிக் கொள்ள கூடாது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.