கொரோனா வைரஸை அழிக்கும் மாஸ்க்..... பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு
பிளஸ்டூ மாணவி ஒருவர் தயாரித்துள்ள முக கவசம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் சாதனைகள் கண்டு பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா: மேற்கு வங்கம், பூர்பா பர்தாமன் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி திகாந்திகா கொரோனா வைரஸை கொல்லும் ஒரு மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார். கொரோனா பாதித்தவரிடமிருந்து வைரஸ் கிருமி மற்றவர்களுக்கு தொற்றாமல் இருப்பதற்கு இந்த முகக் கவசம் மிக அவசியமாகிறது.
காதுகளைப் பாதிக்காத முகக்கவசம், தலையை திருப்பாமலே பின்னால் வருவதை பார்க்கும் மூக்குக்கண்ணாடி முதலானவற்றை கண்டுபிடித்த மாணவி திகந்திதிகா போஸ், இந்த கொரோனா வைரஸை அழிக்கும் ஒரு முக கவசத்தை கண்டுபிடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலரையும் சூறையாடி வருகிறது. 16 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தினசரியும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு மாஸ்க் அணிந்தால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இனி முகக் கவசம் இல்லாமல் மனிதன் வாழ்வது என்பது இயலாத காரியமாகிவிட்டது. இதனால் எத்தனையோ நிறுவனங்கள் எத்தனையோ விதமான முக கவங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
மாணவி சாதனை
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமன் மாவட்டத்தில் வசிக்கும் மாணவி திகந்திகா போஸ். கொரோனா வைரஸை கொல்லும் ஒரு மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார். பிளஸ் 2 மாணவியான இவர் கொரோனா வைரஸை முகக் கவசம் அணிவதன் மூலம் முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
தூய்மையான காற்று
இவர் தயாரித்திருக்கும் முக கவசம் மூன்றடுக்கில் இருக்கிறது. முதல் அடுக்கில் தூசியை வடிகட்டும் மின் காந்த அணுக்கள் உள்ளன. அதை அடுத்து இரண்டாவது அடுக்கின் வழியே காற்று மூன்றாவது அடுக்கில் செல்கிறது. அப்போது அங்குள்ள சோப்பு கரைசல் கொரோனா வைரசை அழித்து தூய்மையான காற்றை சுவாசிக்க வழி செய்கிறது.
வைரஸை கொல்லும்
முககவசத்தில் மூன்று அறைகள் உள்ளது என்று கூறும் மாணவி, இதில் முதல் அறை காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டும் எதிர்மறை அயன் ஜெனரேட்டர் இருப்பதாகவும், வடிகட்டப்பட்ட காற்று இரண்டாவது அறைக்குள் நுழையும்போது, அங்குள்ள சோப்பு மற்றும் தண்ணீர் கரைசல் வைரஸ்களை கொல்லும். இரண்டாவது அறையில் இருந்து காற்று மூன்றாவது அறைக்குள் செல்லும் போது, அங்குள்ள ரசாயனக் கரைசல் வைரஸைக் கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான முக கவசம்
இந்த முகக்கவசத்தை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பயன்படுத்தலாம். இதன் மூலம் கொரோனா பாதித்தவரிடமிருந்து வைரஸ் கிருமி மற்றவர்களுக்கு தொற்றாமல் இருப்பதற்கு இந்த முகக் கவசம் மிக அவசியமாகிறது. தான் கண்டுபிடித்த இந்தத் கவசத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளார்.
மாணவிக்கு பாராட்டு
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை நடத்திய 'சேலஞ்ச் கோவிட்- 19 போட்டியில் பங்கேற்ற திகந்திகா போஸ் தனது இந்த மாஸ்க்கினை காட்சிப்படுத்தினார். இதே போல இவரது பல புதிய கண்டுபிடிப்புகள் மத்திய அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தில் சோதனை நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சாதனை மாணவி
திகந்தகா போஸ் இதற்கு முன்பு மூன்று முறை அப்துல்கலாம் விருதுகளை வென்றிருக்கிறார். காதுகளைப் பாதிக்காது முகக்கவசம், தலையை திருப்பாமல் பின்னால் வருவதை பார்க்கும் மூக்குக்கண்ணாடி முதலானவற்றை கண்டுபிடித்ததற்காக இந்த விருதுகளை அவர் குவித்துள்ளார். மாணவியின் சாதனைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.