சேகர் ரெட்டி கூட்டாளி பரஸ்மால் லோதா யார் தெரியுமா?
மும்பை: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியின் கூட்டாளி பரஸ்மால் லோதா அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோதா கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் என அறியப்பட்டாலும், ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். 1977ல் தூரத்து உறவுக்காரருடன் கொல்கத்தா வந்துள்ளார். ரூ.25 கோடி பழைய ரூபாய்களை மலேசியா சென்று மாற்றுவதற்காக லோதா மும்பை விமான நிலையம் சென்றபோது, அங்கு வைத்து கைது செய்யப்பட்டார்.
லோதா பல்வேறு அரசியல் பிரமுகர்கள், குடிமை நிர்வாகங்கள், போலீஸ்காரர்களுடன் நெருங்கிய பழக்கம் வைத்திருப்பவர். எக்ஸ்ட்ரா ஃப்ளோர் லோதா என்று கூட இவர் அழைக்கப்படுகிறார். காரணம், சட்ட விரோதமாக உயர் மாடி கட்டிடத்தை கட்டி தனது செல்வாக்கால் அதற்கு உரிய அனுமதியை பெற்றவர் இவர்.
கொல்கத்தாவில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். கல்லூரி படிக்கும் காலத்திலேயே சக மாணவர்களுக்கு வெளிநாட்டு இதழ்களை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்துள்ளார். இதன்பிறகு வெளிநாட்டு வாட்சுகள், சென்ட் பாட்டில்களையும் விற்றுள்ளார். நிழலுலக தாதாக்களை வைத்து மிரட்டி பீர்லெஸ் ஜெனரல் ஃபைனான்ஸ் மற்றும் முதலீடு கம்பெனியின் பங்குகளை அதன் மேலாண் இயக்குநர் பி.சி.சென்னிடமிருந்து வாங்கியதாக இவர் மீது புகார் உள்ளது. இது நடைபெற்றது 1991ல் என்பது குறிப்பிடத்தக்கது.