ஏன் இப்படி உயர்ந்து நிற்கிறது துவரம் பருப்பு விலை?
டெல்லி: அம்மாவிடம் மகன் கேட்கிறான், ஏம்மா இன்னிக்கு பருப்பு சாம்பார் வைக்கவில்லை என்று. அதற்கு அம்மா சொல்கிறார், அந்த அளவுக்கு நம்ம கிட்ட வசதி இல்லைப்பா. அதான் சிக்கன் வாங்கி பிரியாணி செஞ்சிருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பா என்று. இப்படி ஜோக் அடிக்கும் அளவு போய் விட்டது துவரம் பருப்பின் விலை.
ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 200 என்ற விலைக்கு போய் விட்டது. சாமானிய மக்களின் கண்களிலிருந்து சாம்பார் தூர தூக்கிப் போய் விட்டது. சிக்கன் பிரியாணியை விட சாம்பார் காஸ்ட்லி என்ற நிலை வந்து விட்டது.
சமூக வலைதளங்களில் பருப்பு விலையை வைத்து அடிக்காத கிண்டல் இல்லை. கடந்த வருடம் ரூ. 100 வரை விற்று வந்த துவரம் பருப்பு தற்போது கிலோ 200ஐத் தாண்டி போயிருப்பது மக்களை அதிர வைத்துள்ளது.
ரெய்டு...
பருப்பு விலை உயர்வைத் தொடர்ந்து பதுக்கல்காரர்களைப் பிடிக்க நாடு முழுவதும் தீவிர ரெய்டு நடத்தப்பட்டது. 13 மநிலங்களில் நடந்த ரெய்டில் 75,000 மெட்ரிக் டன் பருப்புகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
அருண்ஜெட்லியின் புகார்...
மாநில அரசுகள் பதுக்கல்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் குற்றச்சாட்டாகும். வாரத்திற்கு 2 முறை அவர் பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியபடி உள்ளார். ஆனாலும் விலை குறைந்தபாடில்லை.
80% உற்பத்தி...
துவரம் பருப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. துவரை பயிரிடும் விவசாயிகளுக்கு இது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
அறுவடை முடிந்தது...
ஆனால் தற்போது துவரம் பருப்பின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. கோடை காலம் அதாவது காரிப் பருவத்தில் உற்பத்தியான துவரம் பருப்பு இன்னும் சந்தைக்கு வரவில்லையாம் . அறுவடை முடிந்து விட்ட போதும் கூட இன்னும் பருப்பு வரவில்லை.
காரிப்பருவம்...
இந்தியாவில் உற்பத்தியாகும் முக்கியமான ஐந்து பருப்புகளில் துவரம் பருப்பு முக்கியமானது. காரிப் பருவத்தில் தான் இது அதிக அளவில் உற்பத்தியாகிறது. ரபி பருவத்தில் உற்பத்தியாகும் பருப்பின் அளவு 70 சதவீதமாகும்.
பண்டிகை காலம்...
திருவிழாக் காலத்தில் பருப்பு தேவை அதிகரிக்கும். அதாவது கிருஷ்ணாஷ்டமி முதல் தீபாவளி வரை பல பண்டிகைகள் வரிசையாக வருவதால். இந்த சமயத்தில்தான் விலையும் பெருமளவில் உயர்கிறது. எனவே இந்த சமயத்தில் பருப்பை பதுக்க வைத்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் வியாபாரிகள் என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
ஏமாற்றிய மழை...
அதேசமயம் அடுத்தடுத்து 2 பருவ மழை தவறிப் போனதால் உற்பத்தி குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் துவரம் பருப்பை அதிக அளவில் விலைவிக்க வி்வசாயிகள் அக்கறை காட்டாததும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது.
வேறு ஆகாரங்கள்...
மேலும் முட்டை, பால், சிக்கன் என்று புரதத்திற்கு வேறு ஆகாரங்களை மக்கள் அதிக அளவில் நாடுவதும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது என்று இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு கூருகிறது.
முன்னணியில் இந்தியா...
பருப்பு உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முன்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட 16 முதல் 20 மில்லியன் டன் வரை உறுபத்தியாகிறது. ஹெக்டேருக்கு 600 முதல் 800 கிலோ வரை உற்பத்தி செய்யப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
மியான்மரில்...
ஆனால் நம்மை விட ஏழை நாடுகளான மியான்மர் போன்றவற்றில் கூட ஹெக்டேருக்கு 1200 கிலோ வரை விளைவிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது. இது கவலை தரும் விசயமும் ஆகும்.
விவசாயம் பாதிப்பு...
ஜூன் - செப்டம்பர் இடையிலான மழைக்காலத்தில் மழை சரியான அளவில் இல்லை. இதனால் இந்த சமயத்தில் விவசாயம் பெரும் பாதிப்பை இந்தியாவில் சந்தித்தது என்பது உண்மைதான். பருப்பு பயிரிடப்படும் நிலங்களில் 16 சதவீத அளவிலான இடங்களுக்கு மட்டும்தான் நீர்ப்பாசன வசதி இந்த சமயத்தில் கிடைத்தது. தவறிய மழையால் 84 சதவீத நிலங்கள் பா3திப்பை சந்தித்தன.
உற்பத்தி குறைவு...
கடந்த 50 வருடமாகவே பருப்பு உற்பத்தி குறைந்து வருவதாக இன்னொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் இறக்குமதியை நாடும் நிலையில் வியாபாரிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
30 லட்சம் டன்...
தற்போது வருடத்திற்கு 30 லட்சம் டன் பருப்புகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. இது மொத்த இறக்குமதியில் 5 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.