நாடு முழுவதும் 5 கோடியே 55 லட்சம் விதவைகள்… அதிர்ச்சி சர்வே
டெல்லி: இந்திய மக்கள் தொகையில் 5 கோடியே 55 லட்சம் விதவைகள் இருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில் 9 சதவிகித விதவைப்பெண்கள்தான் குடும்ப பாரத்தை சுமக்கின்றனராம். தமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிப்பதாக தெரிவித்துள்ளது அந்த கணக்கெடுப்பு.
2011-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதில் குடும்ப வாழ்க்கை குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள் தொகை 121 கோடி. அவர்களில் 5 கோடியே 55 லட்சம் பேர் விதவை பெண்கள். இவர்களில் 2 கோடியே 23 லட்சம் பேர் குடும்ப பொறுப்பை ஏற்று நடத்துகின்றனர். அதாவது 9 சதவீதம் குடும்பங்கள் விதவைகள் பொறுப்பில் இயங்குவது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் 12 சதவிகிதம்
தமிழ்நாட்டை பொறுத்த வரை 22 லட்சத்து, 33 ஆயிரம் விதவைகள் குடும்ப பொறுப்பை ஏற்றுள்ளனர். அதாவது 100ல் 12 விதவைப் பெண்கள் குடும்ப பாரத்தை சுமக்கின்றனராம்.
உத்தரபிரதேசத்தில் 7%
உத்தரபிரதேசத்தில் 24 லட்சத்து 62 ஆயிரம் விதவைகள் அதாவது 7 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை நிர்வகிக்கின்றனராம்.
வயது வித்தியாசம் அதிகம்
அதற்கு வயது வரம்பு அதிக வித்தியாசத்தில் திருமணம் செய்வதே இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது. ஆண்களுக்கு அவர்களை விட 5 முதல் 10 வயது குறைவான பெண்கள் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.
மரணிக்கும் ஆண்கள்
அதனால் பெண்களுக்கு முன்பே ஆண்கள் இறந்து விடுவதால் குடும்ப பொறுப்பை பெண்கள் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு நிபுணர் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.
இளம் விதவைகள்
இந்த கணக்கெடுப்பு ஒருபுறம் இருக்க, டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டிவருகிறார் என்பது நினைவிருக்கலாம்.