பிரதமர் பதவி கனவில் ப.சிதம்பரம்?
டெல்லி: மத்தியில் மாநிலக் கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும், தற்போதைய நிலையில் தம்மையே காங்கிரஸ் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் என்றும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ப.சிதம்பரம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், இந்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது' என்று தேர்தலுக்கு முன்பே திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பினாலும், இதுதானே யதார்த்தம் என்று திடமாக கூறிவந்தவர் சிதம்பரம்.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த சிதம்பரம், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் சூழல் நிச்சயம் உருவாகும் என்று தெரிவித்தார்.
அப்பாயின்ட்மென்ட்டுக்கு காத்திருக்கனுமே
தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்ட நீங்கள், மே 16-க்குப் பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று கேட்ட கேள்விக்கு கூட, அதை எப்படி இப்போதே சொல்லமுடியும்? தேர்தல் முடிவு வந்த பிறகு எனது பேட்டிக்காக நீங்களே கூட அப்பாயின்மெண்ட் கேட்டுக் காத்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார் சிதம்பரம்.
பிரதமர் கனவு?
தேர்தல் முடிவுகள் தன்னைப் பிரதமர் பதவியில் உட்கார வைக்கலாம் என்பதைத்தான் சிதம்பரம் இப்படிக் குறிப்பிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் போட்டியிடாதது இதனால்..
மேலும் தோற்றுப் போனால் பிரதமராகும் வாய்ப்பை இழக்க நேரிடலாம் என்பதாலேயே தேர்தலில் போட்டியிடாமல் சிதம்பரம் ஒதுங்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டு வந்தது. மகாராஷ்டிரம் அல்லது கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. ஆவதற்கு முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேற்குலக நாடுகள் ஆதரவு
6 பிரதமர்களுக்குக் கீழே 24 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் சிதம்பரம். அவரைத்தான் மேற்குலக நாடுகளும் முன்னிறுத்தி வருகின்றன. இதற்காகவே தமிழகத்தில் தேர்தல் முடிந்த கையோடு டெல்லியில் முகாமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார் சிதம்பரம் எனக் கூறப்படுகிறது.
நந்தன் நிலகேனி, அந்தோணி
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே நந்தன் நிலகேனி, ஏ.கே. அந்தோணி ஆகியோர் பிரதமர் பதவிக்கான பட்டியலில் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.