காவிரி பெல்ட்டின் ஆதரவில் களமிறங்கும் குமாரசாமி.. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பது சந்தேகம்தான்!
கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்க பிரகாசமான வாய்ப்பு உருவாகி இருப்பதால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கிடைப்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்க பிரகாசமான வாய்ப்பு உருவாகி இருப்பதால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கிடைப்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. குமாரசாமி காவிரி விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த பாஜக கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 76 ; ஜேடிஎஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.
இந்த களேபரங்கள் நடந்து கொண்டு இருக்கும் போதே, காவிரி குறித்து பிரச்சனையும் ஒரு பக்கம் சென்று கொண்டுள்ளது. மத்திய அரசு அளித்த காவிரி செயல்திட்ட அறிக்கைக்கு மாநில அரசுகள் நாளை பதில் அளிக்க வேண்டும். இந்த நிலையில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வருவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. குமாரசாமி காவிரி விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. காவிரி கரையோர மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகளில்தான் மதசார்பற்ற ஜனதா தளம் அதிகம் வெற்றிபெற்றுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி ஆதரவாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி காவிரி விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கிறது. தற்போது அதனுடன் இன்னும் கண்டிப்பான ஜேடிஎஸ் கட்சியும் சேர்ந்து இருப்பதால் காவேரி பிரச்சனை இன்னும் பெரிதாகி உள்ளது.