தவறு செய்தால் தொண்டையை அறுக்க வேண்டும்.. பொதுமேடையில் மிரட்டல் விடுத்த அமைச்சர் ஆர்.கே சிங்
தவறு செய்தால் தொண்டையை அறுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஆர்.கே சிங் பொதுமேடையில் மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
பாட்னா: சமீப காலங்களில் பொது இடங்களில் தலைவர்கள் மிரட்டல் விடுக்கும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. அரசுக்கு எதிராக பேசுபவர்களை பாகிஸ்தானுக்கு போக சொல்வது தொடங்கி பத்மாவதி பிரச்சனை வரை அனைத்திற்கும் பொது மேடைகளில் மிரட்டல் விடப்பட்டு இருக்கிறது.
பாஜக கட்சியை சேர்ந்த சிலர் இதுபோல பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மத்திய அமைச்சர் ஆர்.கே சிங் இடம்பிடித்து இருக்கிறார்.
இவர் ''தவறு செய்யும் யாராக இருந்தாலும் அவர்களின் தொண்டையை அறுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
வளர்ச்சி
பீகாரில் இருக்கும் ஆர்ரா என்று தொகுதியில் கடந்த சில மாதங்களாக ''பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி அபிவிருத்தி'' என்ற திட்டத்தின் மூலம் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசு 1.25 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறது. இது அந்த மாநில முகத்தையே மாற்றும் என்று பிரதமர் குறிப்பிட்டு இருந்தார்.
அமைச்சர் பேசினார்
இது குறித்து நேற்று அந்த பகுதியில் கூட்டம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. அதில் மத்திய அமைச்சர் ஆர்.கே சிங் கலந்து கொண்டு இருக்கிறார். ''ஆர்ரா பகுதியில் நடக்க இருக்கும் முன்னேற்ற திட்டங்கள் அனைத்தும் மிக விரைவில் முடிக்கப்படும்'' என்று அவர் உறுதியளித்தார்.
அறுக்க வேண்டும்
இதில் மேலும் பேசிய அவர் ''இந்த பகுதியில் குற்றம் செய்யும் நபர்களின் தொண்டையை அறுக்க வேண்டும். முக்கியமாக ஊழல் செய்ய நினைக்கும் காண்ட்ராக்டர்கள் தொண்டையை அறுக்க வேண்டும். அவர்களை கைது செய்து சிறையில் நிரந்தரமாக அடைக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரல்
இது வீடியோவாக இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. இதனால் அந்த அமைச்சரின் கோபமான பேச்சுக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.