மோடி பிரதமரானால் அமைச்சரவையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு இடம் தருவாரா?
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி அமைச்சரவை குறித்த ஆலோசனைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மோடி பிரதமரானால் அவரது அமைச்சரவையில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெறுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பது ஒட்டுமொத்த ஊடகங்களின் கருத்து கணிப்பு. பாரதிய ஜனதாவும் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்று கருதி அமைச்சரவை தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜகவைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட போது கடுமையாக எதிர்த்தவர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும். மோடிக்கு எதிராக இந்த இருவரின் கலகக் குரல் பாஜகவுக்குள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அத்வானி, ஜோஷி சீனியர்கள்
மோடியைவிட கட்சியிலும் வயதிலும் மூத்தவர்கள் இருவரும். கட்சியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு கீழே பணியாற்றவர் மோடி. அதனால் மோடி பிரதமரானால் அவருக்கு கீழே இப்போது அமைச்சரவையில் இருவரும் இடம்பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருவரை சரிகட்ட ஆர்.எஸ்.எஸ். தீவிரம்
இந்த இருவரையும் எப்படி சரி கட்டுவது என்பது குறித்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் ஆலோசித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இருவரையும் சரிகட்டி சமாதானப்படுத்தும் வகையில் 75 வயதுக்கு மேல் இருப்பவர்கள் மற்றவர்களுக்காக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறதாம்.
தே.ஜ. கூ தலைவராக அத்வானி நீடிப்பு
அதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா இருந்தது போல் அத்வானியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தொடர்ந்து நீடிக்க செய்வது என்பதும் பாஜகவினரின் திட்டமாக இருக்கிறது.
ஜோஷிக்கு கட்சிப் பொறுப்பு
அத்துடன் முரளி மனோகர் ஜோஷியை கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்றை கொடுத்துவிட்டு அவரை அப்படியே ஓரம்கட்டிவிடுவது என்பதும் மோடி ஆதரவாளர்களின் திட்டம் எனக் கூறப்படுகிறது.
அத்வானி, ஜோஷியுடன் கட்காரி பேச்சு
இந்த நிலைப்பாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அத்வானியிடமும் ஜோஷியிடமும் நேற்று நிதின் கட்காரி ஆலோசனை நடத்தியிருக்கிறார். இருப்பினும் அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் இதுவரை எந்த ஒரு கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.
அடக்கி வைக்க தீவிரம்
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே இருவரையும் சமாதானப்படுத்தி கலகக் குரல் எழுப்பாமல் வைத்திருக்க வேண்டும் என்ற மோடி ஆதரவாளர்களின் முயற்சி மும்முரமாக தொடர்ந்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.