வரதட்சணைக்காக இளம்பெண் 3 ஆண்டுகளாக பாத்ரூமில் அடைப்பு!!!
பாட்னா: பீகாரில் வரதட்சணை கேட்டு 25 வயது பெண் கடந்த 3 ஆண்டுகளாக கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள பாட்சன் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கடந்த 2010ம் ஆண்டில் பிரபாத் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததில் இருந்தே வரதட்சணை கேட்டு அவரை அவரது கணவர் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தி வந்தனர். இந்நிலையில் அவர் பெண் குழந்தையை பெற்ற பிறகு கொடுமை அதிகரித்துவிட்டது.
தாங்கள் கேட்ட வரதட்சணை கிடைக்காததால் குமார் மற்றும் அவரது குடும்பத்தார் அந்த பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக வெளிச்சம் இல்லாத கழிவறையில் பூட்டி வைத்திருந்தனர். தாங்கள் நினைத்தால் அவருக்கு மீதமுள்ள உணவை அளித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து அந்த பெண்ணின் தந்தை ஷியாம் சுந்தர் சிங் போலீசில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஞாயிற்றுக்கிழமை குமாரின் வீட்டுக்கு சென்று கழிவறையை திறந்தபோது கிழிந்த ஆடை, பரட்டை தலையுடன் அந்த பெண் பார்க்கவே பரிதாபமாக இருந்தார். 3 ஆண்டுகளாக இருட்டில் இருந்ததால் அவரால் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை. பின்னர் தனது குழந்தையை எங்கே என்று கேட்டார். குழந்தைக்கு தனது தாயை அடையாளம் தெரியவில்லை.
அதை பார்த்து அந்த பெண் கதறி அழுதார். இது குறித்து போலீசார் குமார் அவரது தந்தை தீரேந்திர சிங், தாய் இந்திரா தேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.