வெடிக்கும் மக்கள் தொகை: 2050ல் 970 கோடி… 2100ல் 1120 கோடியாகுமாம்... தாங்குமா பூமி?
டெல்லி: உலக அளவில் மக்கள் தொகை இந்த நூற்றாண்டின் இறுதியில் இருமடங்காகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நூற்றாண்டில் உலக மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறையாது. 2050ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உலக மக்கள் தொகை இருக் கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. மக்கள் தொகை பிரிவு இயக்குநர் ஜான் ஆர் வில்மோத், சியாட்டிலில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற மக்கள் தொகையியல் முன்னறிவிப்பு தொடர்பான 2015- கூட்டுப் புள்ளிவிவர கூட்டத்தில் பேசினார். அப்போது தற்போது உலக மக்கள் தொகை 730 கோடியாக உள்ளது. இது, 2050ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உயரும் என்று கூறியுள்ளார்.
ஆசியா மக்கள் தொகை
ஆசியாவின் தற்போதைய மக்கள் தொகை 440 கோடி. இது 2050ல் 530 கோடியாக இருக்கும். அதே சமயம் 2100-ல் 490 கோடியாகக் குறையும். அதிக இளைஞர்களையும் குறைந்த பிறப்பு விகிதத்தையும் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகள் இந்த நூற்றாண்டு இறுதியில் மக்கள் தொகை மூப்பை கணிசமான அளவு எதிர்கொள்ள நேரிடும்.
மூத்த குடிமக்கள்
மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்த நூற்றாண்டின் இறுதியில் 23 சதவீதமாக இருக்கும். இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள், மூத்த குடிமக்களின் எதிர்கால பாதுகாப்பு, ஓய்வூதியம், சுகாதாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
பிறப்பு விகிதம்
ஆப்பிரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த பிறப்பு வீதம் குறைந்துள்ளது. ஆனால், ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் 1970களில் நிகழ்ந்த குறைந்த பிறப்பு விகிதத்தோடு ஒப்பிடுகையில் இது நான்கில் ஒரு பங்குதான்.
மக்கள் தொகைப் பெருக்கம்
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மக்கள் தொகை வளர்ச்சி முடிவுக்கு வராது. ஆப்பிரிக்க சஹாரா துணைக் கண்ட பகுதியில் இன்னும் அதிவேக மக்கள் தொகைப் பெருக்கம் உள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிறப்பு வீதம் குறைந்தாலொழிய மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறையாது என்று கூறியுள்ளார்.
மக்கள் தொகை 500 கோடி
உலகத்தின் சுழற்சி வேகத்தை மிஞ்சும் வகையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 1987 ஜூலை 11ம் நாள் உலகின் மக்கள் தொகை 500 கோடியை எட்டியது.
700 கோடி
இன்று அறிவியல் வளர்ச்சி, மருத்துவ உலகின் வேகமான வளர்ச்சியின் காரணமாக உலக மக்கள் தொகை 700 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு நாளும் உலக மக்கள் தொகையானது 2,03,800 என்ற அளவில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மக்கள் தொகை இருமடங்கு
உலகில் 5ல் 3 பங்கு மக்கள் தொகையை ஆசிய கண்டமே கொண்டுள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவும், சீனாவும் முதன்மை பெறுகின்றன. இதனிடையே இந்த நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகை ஆயிரத்து 120 கோடியாக அதிகரிக்கப்போவதாக அச்சுறுத்துகிறது ஐ.நாவின் புள்ளிவிபரம்... இந்த உலகம் தாக்குமா?